ரொம்ப உழைக்கிறாய்.. கொஞ்சம் ஓய்வு எடு தம்பி.. பாசத்தோடு பிரதமர் மோடியிடம் கூறிய அண்ணன்.. கண்ணீர்
காந்தி நகர்: குஜராத்தில் நேற்று நடந்த 2ம் கட்ட தேர்தலில் பிரதமர் மோடி ஓட்டளித்துவிட்டு தனது அண்ணண் சோமாபாய் மோடியை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் அவருடைய அண்ணன் சோமாபாய் மோடி கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. 2வது கட்டமாக நேற்று 93 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த 2 கட்ட தேர்தல்களிலும் பதிவாகி உள்ள ஓட்டுக்கள் டிசம்பர் 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில் அடுத்த ஆட்சியை எந்த கட்சி அமைக்க உள்ளது என்ற விபரம் அப்போது தெரியவரும்.

ஓட்டுப்போட்ட பிரதமர் மோடி
குஜராத்தை பொறுத்தமட்டில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி தான் நடந்தது. இந்த முறை பாஜக, காங்கிரஸ், புதிதாக ஆம்ஆத்மி கட்சிகள் போட்டியிட்டன. குஜராத் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமாகும். இதனால் நேற்று நடந்த தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஓட்டளித்தனர்.

வரிசையில் நின்ற பிரதமர் மோடி
இதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினமே குஜராத் சென்றார். காந்தி நகரில் உள்ள தனது தாய் ஹீராபென்னை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் தாயின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அதன்பிறகு ஹீராபென் மோடிக்கு தேநீர் வழங்கினார். இதையடுத்து நேற்று காலையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப் நிஷான் அரசு பள்ளியில் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டார்.

அண்ணனை சந்தித்த மோடி
இதையடுத்து பிரதமர் மோடி தனது அண்ணன் சோமாபாய் மோடியை சந்தித்து பேசினார். ஓட்டுச்சாவடி அருகே இருந்த அண்ணன் சோமாபாயின் வீட்டுக்கு பிரதமர் மோடி நடந்து சென்று பேசினார். அங்கு இருவரும் சிறிதுநேரம் ஒன்றாக அமர்ந்து பேசினார். இதையடுத்து பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பத்திரிகையாளர் சந்திப்பு
இதையடுத்து பிரதமர் மோடி ஓட்டளித்த அதே ஓட்டுச்சாவடியில் அவரது அண்ணன் சோமாபாய் மோடி நேற்று ஓட்டு செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடியின் அண்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியிடம் பேசியது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

கண் கலங்கிய அண்ணன்
அதற்கு சோமாபாய் மோடி, "2014 தொடங்கி இதுவரை மோடி தலைமையில் மத்திய அரசு செய்துள்ள பணிகளை மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள். உழைப்பவர்களுக்கே ஓட்டுப்போடுவார்கள். மோடி நாட்டுக்காக உறக்கம் இன்றி ஓடி ஓடி உழைக்கிறார். அவரை சந்திக்கும்போதெல்லாம் கொஞ்சம் ஓய்வும் தேவையென்று சொல்வேன். அதன்படி அவரை சற்று ஓய்வெடுக்கும்படி சொன்னேன்'' என கண் கலங்கியபடி கூறினார்.

ஆட்சியமைக்க போவது யார்?
முன்னதாக பிரதமர் மோடியின் தாய் ஹீராபென் காந்தி நகரில் ஓட்டுப்போட்டார். வீல்சேரில் அழைத்து வரப்பட்ட அவர் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். குஜராத்தில் 2 கட்டங்களாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளதால் நேற்று மாலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் அனைத்து கருத்து கணிப்புகளும் பாஜகவுக்கு சாதமாக உள்ளது. பாஜக 120க்கும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

டிசம்பர் 8 ல் முடிவு
ரிபப்ளிக் டிவியின் கருத்து கணிப்புன்படி குஜராத்தில் பாஜக 128 - 148 இடங்களிலும், காங்கிரஸ் 30 - 42 இடங்களிலும் ஆம் ஆத்மி 2 - 1 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்தியா டூடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பின்படி பாஜக 131-151 இடங்களையும், காங்கிரஸ் 16-30 இடங்களையும், ஆம் ஆத்மி 9-21 இடங்களை வெல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கூட குஜராத்தில் புதிய ஆட்சியை பிடிப்பது யார்? என்பதை அறிய நாம் டிசம்பர் 8 ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications