பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் சேலஞ்ச்.. அப்படி நடக்காவிட்டால் பதவி விலகுகிறேன் என அறிவிக்க தயாரா?
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 200 இடங்களை பெற தவறினால், பாஜக தலைவர்கள் பதவியை விட்டு விலகுகிறேன் என இப்போதே பதிவு செய்ய தயாரா என்று தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கததில் பாஜக மேற்கு வங்க தேர்தலில் 100 இடங்களை பெற்றால், தான் ட்விட்டரை விட்டே விலக தயார் என்று சவால் விடுத்திருந்தார்.
இந்த சூழலில் பாஜக தலைவர்களுக்கு வெற்றி பெற முடியுமா என்று நேரடியாக பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்திருப்பது மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே சமயத்தில் தேர்தல்
வரும் 2021ம் ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கத்திற்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.

ஐபேக் நிறுவனம்
மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிராக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய கட்சிகளுக்காக அரசியல் நிபுணத்துவ வேலைகளை செய்து வருகிறார் ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்

அசுர வளர்ச்சி
2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் வெறும் 3 இடங்களில் வென்ற பாஜக அடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 16 இடங்களில் வென்று அசத்தியது . 22 இடங்களில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வென்றது. காங்கிரஸ் இரண்டு இடத்தில் வென்றது. இடதுசாரிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இறங்கி வந்த மம்தா
பாஜகவின் அசுர வளர்ச்சியால் அதிர்ச்சி அடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, பிரசாந்த் கிஷோரின் அரசியல் நிபுணத்துவ உதவியை நாடி உள்ளார். இடதுசாரிகளுடன் இணையக்கூட தயார் என்ற நிலைக்கு வந்தார் தற்போது நேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் இருந்த இடத்திற்கு பாஜக இப்போது வளர்ந்துள்ளது. ஆளும் மம்தா பானர்ஜிக்கு பாஜக கடும் சவாலாக உள்ளது. இந்த முறை திரணாமுல் காங்கிரஸ் கட்சியா பாஜகாவா என்ற கடும் போட்டி நிலவுகிறது.

திடீர சவால்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா - பிரசாந்த் கிஷோர் ஆகியோரிடையே அரசியல் நிபுணத்துவ போட்டி நிலவுகிறது. யாருடைய வேலை வெல்லப்போகிறது என்ற ஆவல் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தை கடப்பது சாத்தியமே இல்லை. ஒருவேளை கடந்தால் நான் ட்விட்டரை விட்டே விலகுகிறேன் என அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சவால் விடுத்தார்

பிரசாந்த் கிஷோர் சவால்
இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில். இந்த ட்விட்டை சேமித்து வையுங்கள், மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை கடப்பது சாத்தியமே இல்லை. ஒரு வேளை கடந்தால் நிச்சயமாக நான் ட்விட்டரை விட்டே விலகுகிறேன். எனினும் பாஜக மேற்கு வங்க தேர்தலில் இரட்டை இலக்கத்தை கடக்க கடுமையாக போராடும் என்றார். முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி உள்பட ஒன்பது எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ஆகியோர் பாஜகவில் இணைந்ததால் கிஷோர் இப்படி ஒரு ட்விட்டை வெளியிட்டார்.

பதவி விலக தயாரா
இதற்கு பதிலடியாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா மேற்கு வங்காளத்தில் பாஜக அடுத்த அரசாங்கத்தை அமைத்தால் நாடு ஒரு தேர்தல் நிபுணரை இழக்க நேரிடும் என்று கேலி செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக 200 இடங்களைப் பெறத் தவறினால் தங்களது பதவிகளில் இருந்து விலகுவதாக இப்போதே பதிவு செய்ய முடியுமா என்று பாஜக தலைவர்களுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளர். இந்த தகவலை பி.டி.ஐ தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications