வரா கடன்களை ஒழுங்குபடுத்தி பெருநிறுவனங்களின் பகையை சம்பாதித்த ரகுராம் ராஜன்.. வல்லுநர்கள் கருத்து
மும்பை: இந்திய வங்கிகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாகப் பெற்றுவிட்டு அதைத் திருப்பி தராமல் ஏமாற்றி வந்த பெருநிறுவனங்களுக்கு பேரிடியாக திகழ்ந்தவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்... அத்துடன் நாட்டின் அரசியல் சகிப்பின்மையானது பொருளாதாரத்தை பாதிக்கும் எனவும் கலகக் குரல் எழுப்பியவர்...இதனால்தான் ரகுராம் ராஜன் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிப்பதற்கு பெருநிறுவனங்களும் அவற்றின் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் 2-வது முறையாக நீடிக்க தாம் விரும்பவில்லை; சிகாகோவுக்கு சென்று கல்விப் பணியில் ஈடுபடப் போவதாகவும் ரகுராம் ராஜன் அறிவித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரகுராம் ராஜனின் இந்த முடிவு குறித்து பல்வேறு துறைசார் வல்லுநர்களும் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்தாலும் நாட்டில் விஸ்வரூபமெடுத்த சகிப்பின்மை குறித்தும் ரகுராம் ராஜன் கவலை தெரிவித்திருந்தார். "இந்தியாவின் மிகப்பெரிய பலம் ஜனநாயகம். இந்த மிகப்பெரிய நலனை நாம் தேவையற்ற சர்ச்சைகளில் இழந்து விடகூடாது" என்றார். இதனால்தான் அவரை 'சகிப்பின்மை' பேசுவதை சகிக்காத சக்திகள் வெறுக்கத் தொடங்கின.
பதவி நீட்டிப்பு கொடுத்திருக்கலாம்
ரகுராம் ராஜனின் இம்முடிவு குறித்து சிகாகோ பிசினஸ் பள்ளியில் அவரது சகாவான லூய்ஜி ஸின்கேல்ஸ் கூறுகையில், ரகுராம் ராஜனின் முடிவு மிகவும் ஏமாற்றம் தருகிறது... ரகுராம் ராஜனை தக்கவைக்க போராட வேண்டிய அரசு அவரை வழியனுப்ப முடிவு எடுத்துள்ளது என கவலை தெரிவிக்கிறார்.
இந்தியா மதிப்பிழக்கும்
இந்திய வம்சாவளி பொருளாதார வல்லுநரும் பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சித் தலைவருமான மேக்நாத் தேசாய், ரகுராம் ராஜன் முடிவு குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஆனால் இதனால் வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு குறைந்துவிடும் என வருந்துகிறேன். ஒரு மத்திய வங்கி அதிகாரி என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ததற்காக அவரை விமர்சனம் செய்தனர். பணவீக்கம் மற்றும் வங்கிகள் வாராக்கடன் விவகாரங்களில் அவர் எடுத்த நடவடிக்கைகளை இந்திய அரசு ஏற்கவில்லை; வங்கிகளின் பேலன்ஸ் ஷீட்கள் கொள்கைகளுக்கு இந்தியாவில் அங்கீகாரம் இல்லை என்ற பிம்பத்தையே இது உருவாக்கியுள்ளது என்றார். முன்னாள் நிதிச்செயலர் அரவிந்த் மயாராம் கூறுகையில், 2-வது முறையாக தொடரப்போவதில்லை என்ற ரகுராம் ராஜனின் முடிவு இந்தியப் பொருளாதாரத்துக்கு பின்னடைவு என்கிறார்.
சாடும் அமர்த்தியா சென்
நோபல் பரிசு வென்ற பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென், மிகவும் திறன் படைத்த உலகின் சிறந்த பொருளாதார வல்லுநரை நாம் இழக்கிறோம். இது நாட்டுக்குத் துயரம், அரசுக்கு துயரம், ரிசர்வ் வங்கி என்பது கூட தன்னாட்சி பெற்ற நிறுவனமாக இல்லையோ என ஒரு டிவி பேட்டியில் கூறியிருக்கிறார்.
மோகன் குருசாமி
ரகுராம் ராஜன் குறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் மூத்த ஊடகவியலாளர் மோகன் குருசாமி இப்படி பதிவு செய்திருக்கிறார்..."ரகுராம் ராஜனுக்கு பதவிக் காலம் வரும் செப்டம்பரில் முடிவடைய இருக்கும் நிலையில், அவருக்கு உரிய நேரத்தில் பதவி நீட்டிப்பு குறித்து முடிவு எடுக்கப்படாததே அவர் அமெரிக்கா திரும்ப முடிவு செய்தற்கான காரணம்; ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டதிலிருந்தே, அவர் திறமையாக செயல்பட்டார், வங்கிகளின் வராக்கடன்களை கடுமையாக ஒழுங்குபடுத்தினார், இது இந்திய பெருநிறுவனங்களின் பகையை அவருக்குத் தேடித்தந்தது என்று பதிவு செய்திருக்கிறார்.
மேலும் ரகுராம் ராஜனுக்கு இருந்த சர்வதேச அந்தஸ்தும் நம்பகத்தன்மையும் முக்கியமானவை; தனது பதவிக்காலத்தில் எடுத்த முடிவுகள் மற்றும் கோடிட்டுக்காட்டிய பிரச்சனைகள் இனி அலட்சியப்படுத்தமுடியாதவை என்கிறார் மோகன் குருசாமி.