200 ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்களில் வர வேண்டும்... வங்கிகளுக்கு ஆர்பிஐ திடீர் உத்தரவு
ஏடிஎம்களில் 200ரூபாய் கிடைக்கும் வகையில் அதனை சீரமையுங்கள் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: 200 ரூபாய் நோட்டுகள் அடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அவை முழுமையாக மக்களிடத்தில் சேராததால் ஏடிஎம் மூலமாக அவற்றை வினியோகிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. அளவில் சின்னதாக இருந்த நோட்டுகளை ஏடிஎம்களில் வினியோக்க, ஏடிஎம்களில் சில மாற்றங்களை வங்கிகள் செய்தனர். இதனைத்தொடர்ந்து மக்களிடத்தில் புதிய 500ரூபாய் நோட்டுகள் வந்துடைந்தது.
இந்நிலையில் புதிய 200, 50, 20 உள்ளிட்ட நோட்டுகளை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த புதிய 200 ரூபாய் நோட்டு அளவில் வேறு விதமாக உள்ளதால், அவற்றை ஏடிஎம் மூலம் வழங்காமல் வங்கிகள் காலதாமதம் செய்தன.
இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, 200ரூபாய் வினியோகிக்கப்படும் வகையில் ஏடிஎம்களை சீரமைக்க வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனால் 200ரூபாயின் தேக்க நிலை மாறி அனைவரிடத்திலும் அந்த நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என்றும் கருதப்படுகிறது.
ஆனால் இவ்வாறு நாட்டில் உள்ள ஏடிஎம்களை அனைத்தையும் சீரமைக்க பல நூறு கோடி ரூபாய் ஆகும் என்றும், அதனாலே வங்கிகள் அனைத்தும் இதனை செயல்படுத்த தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் உத்தரவை தொடர்ந்து இந்த பணியில் வங்கிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.