வயிற்றில் குத்தி தொழிலாளியைக் கொன்ற ரோபோ!
மானேசர்: ஹரியானா மாநிலத்தில் உள்ள கார் பாகங்கள் தயாரிக்கும் எஸ்.கே.ஏ என்ற தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளி ஒருவர் ரோபோ தாக்கி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
குர்கான் அருகே மானேசரில் உள்ள அந்த தொழிற்சாலையில் வெல்டிங் செய்வதற்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. ரோபோ வெல்டிங் பணியில் ஈடுபட்டிருக்கும் போது உலோக தகடு நகர்ந்ததால், அதனை சரி செய்ய ஜி.ராம் என்ற 24 வயது தொழிலாளி முயன்றுள்ளார்.
அப்போது ரோபோவின் அதிக மின்சாரம் பாயும் வெல்டிங் குச்சியால் அவர் வயிற்றில் தாக்கப்பட்டுள்ளார். அவரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ரோபோ ஒரு தொழிலாளியை கொன்ற சம்பவம் பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் கார் தொழிற்சாலையில் ரோபோ ஒன்று ஊழியர் ஒருவரை எதிர்பாராத விதமாக கொன்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது.