சபரிமலை ஐயப்பன் கோவில் இனி ஸ்ரீ ஐயப்ப சாமி கோவில் என்று அழைக்கப்படும்!
சபரிமலை ஐயப்பன் கோவில் இனிமேல் ஸ்ரீ ஐயப்ப சாமி கோவில் என்று அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா: புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் பெயரை, ஸ்ரீஐயப்ப சாமி கோவில் என்று மாற்றி அறிவித்துள்ளது கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு.
அக்டோபர் 5ம் தேதி நடந்த தேவசம் போர்டு கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது இது அமலுக்கு வந்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவில், சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் என்று அழைக்கப்படுவது வழக்கம். அது இனிமேல் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சாமி கோவில் என்று அழைக்கப்படும். பெயர் மாற்றம் தொடர்பான உத்தரவையும் போர்டு பிறப்பித்துள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட சபரிமலையில் ஐயப்பன் கோவில் உள்ளது. வருடந்தோறும் இங்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திராவைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். வெளிநாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வருகிறார்கள்.
திருவாங்கூர் தேவசம் போர்டுதான் சபரிமலை கோவிலை நிர்வகித்து வருகிறது. ஆனால் தேவசம் போர்டு வசம் மொத்தம் 1248 கோவில்கள் உள்ளன. அதில் சபரிமலை ஐயப்பன் கோவில்தான் மிகப் பெரிய கோவிலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.