தூய்மை இந்தியா... ஆந்திராவில் குக்கிராமத்தை தத்து எடுத்த சச்சின் டெண்டுல்கர்!
ஹைதராபாத்: தூய்மை இந்தியா திட்டத்தின் படி ஆந்திர மாநிலத்தில் உள்ள குக்கிராமம் ஒன்றை தத்து எடுத்து அதன் வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிடுகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.
கடந்த மாதம் 2ம் தேதி காந்தி ஜெயந்தியின் போது தூய்மை இந்தியா என்ற திட்டத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி. மகாத்மா காந்தியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான இதனை வரும் 2019ம் ஆண்டிற்குள் செய்து முடிக்க வேண்டும் என இலக்கும் அவர் நிர்ணயித்தார்.
அதன்படி, முதல்கட்டமாக ஒன்பது பிரபலங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அந்தப் பிரபலங்கள் தங்களது பங்களிப்பை செய்து முடித்ததும், அவர்கள் மேலும் ஒன்பது பேருக்கு அழைப்பு விட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மோடியின் அழைப்பை ஏற்று பிரபலங்கள் பலரும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆந்திர கிராமம் ஒன்றை தத்தெடுக்க விரும்பினார். இது தொடர்பாக தனது ஆசையை பிரதமரிடமும் அவர் தெரிவித்தார்.
குக்கிராமம்...
அதனைத் தொடர்ந்து ஆந்திராவில் நெல்லூர் மாவட்டம் கூடூர் அருகேயுள்ள புட்டம்ராஜிகண்டிகை என்ற குக்கிராமத்தை தேர்வு செய்துள்ளார் சச்சின்.
அடிப்படை வசதிகள்...
ஆயிரம் மக்கள் தொகை உள்ள இக்கிராமத்திற்கு தன் ராஜ்யசபா உறுப்பினர் நிதியில் இருந்து கிடைக்கும் தொகையில் பல அடிப்படை வசதிகளை செய்து தர சச்சின் திட்டமிட்டுள்ளார்.
நேரில் பார்வை...
இதற்காக இம்மாதம் 15ம் தேதி மும்பையில் இருந்து சென்னைக்கு வரும் சச்சின், பின்னர் 16ம் தேதி காலை கூடூர் பகுதிக்கு சென்று புட்டம்ராஜிகண்டிகை கிராமத்தை நேரில் பார்வையிடுகிறார்.
பணிகள் தொடக்கம்...
சர்வதேச அளவில் இக்கிராமத்தை வளர்ச்சி அடையச் செய்ய விரும்புகிறாராம் சச்சின். இதற்கான பணிகள் கடந்த சில தினங்களாகவே அங்கு நடந்து வருகின்றன.
ஆட்சியர் மேற்பார்வையில்...
இக்கிராமத்தில் சாலை, குடிநீர், மின்மாற்றி, தெருவிளக்கு, பூமிக்குள் கழிவுநீர் கால்வாய், சுகாதாரம், மழைநீர் தேக்கத்திற்கான வசதி பணிகள் ஆகியவை மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதற்கான மேற்பார்வை பணிகளை, நெல்லுார் மாவட்ட ஆட்சியர் கண்காணித்து வருகிறார்.