விடுதலை... கதறி அழுத சல்மான்... வெடித்துச் சிரித்த தங்கை... நிவாரண நிதி ஏக்கத்தில் பாதிக்கப்பட்டோர்!
மும்பை: மும்பை பந்த்ரா பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் சல்மான்கானை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பைக் கேட்டு, தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் சல்மான்கான் கதறி அழுதார்.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த மே மாதம் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதனைத் தொடர்ந்து சல்மான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
விடுதலை...
அதில், சல்மானுக்கு எதிராக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. சந்தேகத்தின்பேரில் அவருக்கு தண்டனை அளிக்க முடியாது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ரவீந்திர பாட்டிலின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. எனவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிபதி ஏ.ஆர். ஜோஷி தெரிவித்தார்.
முடிவுக்கு வந்த வழக்கு...
நீதிபதியின் இந்தத் தீர்ப்பால் 13 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. இந்த தீர்ப்பால் அவரது குடும்பத்தாரும் நிம்மதி அடைந்தனர். மிகவும் மகிழ்ச்சியடைந்த சல்மானின் தங்கை அல்விராவால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர், செய்தியாளர்களை நோக்கி கையசைத்தார்.
பாடல் பாடிய சல்மான்...
முன்னதாக, நீதிமன்ற உத்தரவிற்கு இணங்க நேற்று மதியம் சுமார் 1.30 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்த சல்மான், பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்தார். தனது விடுதலை குறித்து நீதிபதி அறிவித்தவுடன், தனது மன உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் விதமாக பார்வையாளர் பகுதியில் இருந்த சல்மான் சுவரில் சாய்ந்துக் கொண்டு ஒரு பாடலை முணுமுணுத்தப்படி நின்றார்.
கண்ணீர் விட்டார்...
ஆனால், சிறிது நேரத்திலேயே தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழத் தொடங்கினார். இதனைப் பார்த்த அவரின் பாதுகாவலர் ஷேரா, சல்மானிடம் சென்று மக்கள் பார்க்காதவாறு சுவரை நோக்கி திரும்பிக்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்டோர்...
இது ஒருபுறம் இருக்க இந்தக் கார் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தார் மற்றும் காயமடைந்தவர்கள், இந்தத் தீர்ப்பால் தங்களுக்கு எவ்வித நன்மையோ அல்லது தீமையோ இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
தடம் மாறிய வாழ்க்கை...
இந்த கார் விபத்தில் உயிரிழந்தவரின் மகனான பெரோஸ் கூறுகையில், ‘இந்த வழக்கில் சல்மான் விடுவிக்கப் பட்டாலும், தண்டிக்கப் பட்டாலும் எங்களது வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. விபத்தால் தந்தையை இழந்த நான், குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு செல்லத் தொடங்கினேன்.
உதவி கிடைக்குமா?
இந்தத் தீர்ப்பு எங்கள் வாழ்க்கை மாற்றிவிடப் போவதில்லை. அதற்குப் பதில் பாதிக்கப்பட்ட எங்களின் குடும்பங்களுக்கு சல்மான் ஏதேனும் நிதி உதவி செய்தால் நலமாக இருக்கும். அப்படிச் செய்தால் எங்கள் குழந்தைகளையாவது படிக்க வைக்க இயலும்' எனத் தெரிவித்துள்ளார்.