மிரட்டலுக்கு பயமில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் கோஷமிட்ட கட்ஜு.. பாதுகாவலர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு
டெல்லி: சுப்ரீம்கோர்ட்டில் அநாகரீகமாக கோஷமிட்ட முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டார். அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த, 2013ல், கேரளாவைச் சேர்ந்த பெண் சவும்யா, 23, ரயிலில் பயணித்த போது, கோவிந்தசாமி என்பவன் பாலியல் பலாத்காரம் செய்து, கீழே தள்ளி விட்டதாகவும், அதனால், அந்த பெண் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த, திருச்சூர் விரைவு கோர்ட், கோவிந்தசாமிக்கு, மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை, 2014ல், கேரளா ஹைகோர்ட் உறுதி செய்தது.
குறை கூறிய கட்ஜு
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணை முடிவில், செப்டம்பரில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட், கோவிந்தசாமியின் மரண தண்டனையை ரத்து செய்தது. இருப்பினும், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை உறுதி செய்து, அவருக்கு, ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, செப்டம்பர் 17ல், பேஸ்புக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை குறை கூறியிருந்தார்.
தானாக முன்வந்து விசாரணை
இந்நிலையில், சவும்யாவின் தாய் சுமதி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த சீராய்வு மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ரஞ்சன் கோகோய், பி.சி.பந்த், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், கடந்த அக்டோபரில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, சவும்யா கொலை வழக்கு தொடர்பாக கூறிய கருத்தை, தாங்களாக முன்வந்து எடுத்துக் கொண்ட நீதிபதிகள், நவம்பர் 11ல், அவர் நேரில் ஆஜராகி, விவாதிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, எந்த வகையில் தவறானது என்பதை, அவர் விளக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
நேரில் ஆஜர்
இதையடுத்து, மார்கண்டேய கட்ஜு இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மார்கண்டேய கட்ஜு தீர்ப்பை விமர்சனம் செய்ததோடு, தீர்ப்பை வழங்கிய நீதிபதியையும் விமர்சனம் செய்ததாக குற்றம் சாட்டினர் நீதிபதிகள். எனவே, மார்கண்டேய கட்ஜு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதாகவும், அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கட்ஜு அநாகரீகம்
இதைக்கேட்ட கட்ஜு கடும் கோபம் கொண்டார். "மிஸ்டர். கோகோய் (நீதிபதிகளில் ஒருவர் பெயர் ரஞ்சன் கோகோய்), நீங்கள் என்னை மிரட்டி பார்க்காதீர்கள். அப்படி செய்தாலும் நான் பயப்பட மாட்டேன். இந்தியா சுதந்திரமான நாடு, உங்களால் எனது சுதந்திரத்தை தடுக்க முடியாது" என்று கத்தி கோஷமிட்டார். மேலும், நீதிபதியை பார்த்து, கோகாய் என பெயரை சொல்லி திரும்ப திரும்ப அழைத்தார். அவர் சுப்ரீம் கோர்ட்டில் தனக்கு ஜூனியர் எனவும் கேலியாக தெரிவித்தார் கட்ஜு.
முதல் முறையாக நோட்டீஸ்
இதனால் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், பாதுகாவலர்களை அழைத்து கட்ஜுவை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டு சென்றுவிட பணித்தனர். இதனால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸை பெறும் முதலாவது ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்கண்டேய கட்ஜுதான் என்பது குறிப்பிடத்தக்கது.