வேட்புமனுவில் திருமண விவகாரம்: மோடிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் நிராகரிப்பு
டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்த வேட்புமனுவில் தமது திருமணம் தொடர்பான இடத்தில் எதுவும் பதிவு செய்யாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
2012ஆம் ஆண்டு குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது வேட்புமனுவை தாக்கல் செய்த நரேந்திர மோடி, திருமணம் தொடர்பான இடத்தில் ஆம் என்றோ இல்லையோ என்று பதிவு செய்யவில்லை. அந்த இடத்தில் எதுவும் நிரப்பாமல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அதனால் இந்த வேட்புமனுவை ஏற்ற தேர்தல் அதிகாரியின் முடிவை ரத்து செய்ய கோரியும் முழுமையாக வேட்புமனுவை தாக்கல் செய்யாத மோடி மீது நடவடிக்கை கோரியும் உச்சநீதிமன்றத்தில் சுனில் சரவ்கி என்பவர் பொதுநலன் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இம்மனு தலைமை நீதிபதி பி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வேட்புமனு தொடர்பான முடிவுகள் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்று கூறி மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்.