பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இத்தாலிய மாலுமி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: கேரள மீனவர்களை சுட்டுக் கொலை செய்த இத்தாலிய மாலுமிகளில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவரை சிகிச்சைக்காக சொந்த நாட்டுக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 கேரள மீனவர்களை சுட்டுக் கொன்ற இத்தாலிய கடற்படை மாலுமிகள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாலுமிகளில் ஒருவரான லடோர்ரே பக்கவாததத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக தமது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் தாம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை ஏற்ற உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்தது. அத்துடன் அவர் இத்தாலிக்கு சிகிச்சைக்காக 2 மாத காலம் செல்ல அனுமதி கோருவது குறித்து பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.