டெல்லியில் பா.ஜ.க ஆட்சி அமைக்க ஷீலா தீட்சித் ‘திடீர்’ ஆதரவு! 'ஷாக்' ஆன காங்கிரஸ்!!
டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
டெல்லி சட்டசபை முடக்கி வைக்கப்பட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி மாற்று அரசு அமைக்க முயன்று வருகிறது. பிற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பாஜக பேரம் பேசி வருவதாக ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

ஷீலா தீட்சித் திடீர் ஆதரவு
இந்நிலையில் காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு மாறாக, பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க டெல்லி மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷீலா தீட்சித் திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் 15 ஆண்டுகள் டெல்லி முதல்வராக இருந்துள்ளார்.

தீவிர அரசியலில் குதித்தார்
இவரது தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் தேர்தலை சந்தித்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்தது. பின்னர், கேரள ஆளுநராக நியமிக்கப்பட்ட ஷீலா தீட்சித், கடந்த மாத இறுதியில் பதவி விலகி தீவிர அரசியலில் குதித்துள்ளார்.

பாஜக ஆட்சி நல்லதுதான்..
இந்த நிலையில் ஷீலா தீட்சித் அளித்த ஒரு பேட்டியில், ஜனநாயகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இருப்பது எப்போதும் நல்லதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால்தான், மக்கள் குரல் செவிமடுத்து கேட்கப்படுவது இல்லை.
எனவே பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்தால் அது டெல்லிக்கு நல்லது. அதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிர்ச்சி- காங்கிரஸ்
இது காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இது பற்றி டெல்லி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் முகேஷ் சர்மா கூறுகையில், ஷீலா தீட்சித்தின் அறிக்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அது அவரது சொந்த கருத்து. அதற்கும், காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்பதுதான் தொடக்கத்தில் இருந்தே காங்கிரசின் நிலைப்பாடு என்றார்.

வரவேற்பு- பாஜக
ஷீலா தீட்சித் கருத்தை பாரதிய ஜனதா வரவேற்றுள்ளது. இதுபற்றி டெல்லி பாஜக தலைவர் சதீஷ் உபத்யாயா கூறுகையில், ஷீலா தீட்சித் 15 ஆண்டுகள் ஆட்சி நடத்திய அனுபவம் உள்ளவர். அரசியல் சட்ட விதிகளை நன்கு அறிந்தவர். அவரது நேர்மையான அறிக்கையை பாராட்டுகிறேன் என்றார்.

ஏன் ஆதரவு?
காமன்வெல்த் ஊழல் வழக்கில் ஷீலா தீட்சித்துக்கு நெருக்கடி இருக்கிறது. இதனாலேயே அவர் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று பிடிவாதம் பிடித்ததாகவும் கூறப்பட்டு வந்தது. வேறுவழியில்லாமல் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த ஷீலா தீட்சித் திடீரென பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும் கூட காமன்வெல்த் ஊழல் வழக்கில் இருந்து எப்படியாவது தப்பிவிடலாம் என்பதற்காகத்தான் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications