பாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்
பாகிஸ்தான் மீது போர்தொடுக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி காட்டமாக தெரிவித்து உள்ளார்.
டெல்லி: பாகிஸ்தான் தொடர்ந்து நம்மை அவமானப்படுத்தி வருகிறது அதனால் இந்தியா உடனடியாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து அதை நான்காக பிரிக்க வேண்டும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கை, விசாரித்த ராணுவ நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவிற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு விதித்து இருந்தது. மேலும், குல்பூஷன் ஜாதவை சந்திப்பதற்கான உத்தரவையும் வழங்கி இருந்தது.
இதனையடுத்து, கடந்த 25ம் தேதி குல்பூஷன் ஜாதவின் மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி இருவரும் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் குல்பூஷனை சந்தித்து பேசினர்.
மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இருவரும் தாலி, பொட்டு, வளையல்கள் அணியக்கூடாது என்றும், உள்ளூர் மொழியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. விரும்பத்தகாத இந்த செயல்கள் இந்தியாவில் பல்வேறு கண்டனங்களை எழுப்பி உள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவின் பொறுமையை பயன்படுத்தி பாகிஸ்தான் நம்மை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. மகாபாரதத்தில் நடந்த திரெளபதி துகிலுரித்தல் போல, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொண்டது விரும்பத்தக்கது அல்ல.
அவர்களுக்கு பாடம் புகட்ட இந்தியா போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்க வேண்டும். நிச்சயம் இந்திய அரசால் அது முடியும். உடனடியாக போர் தொடுக்காவிட்டாலும், அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். இப்போதைக்கு இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால், விரைவில் பாஜக இந்த கருத்தை ஆதரிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications