டெஹல்கா தருண் தேஜ்பால் வழக்கு- சோமா சவுத்ரி சாட்சியமளிக்க கோவா போலீஸ் சம்மன்
பனாஜி: டெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பலாத்கார வழக்கில் சாட்சியமளிக்க அப்பத்திரிகையின் முன்னாள் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரிக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
டெஹகல்கா பத்திரிகை ஆசிரியர் தருண் தேஜ்பால், தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் புகார் கூறினார். இது தொடர்பாக தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் பலாத்கார வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அவரை தற்போது கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வரும் கோவா போலீசார், ஆண்மை பரிசோதனைகளையும் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக டெஹல்கா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோமா சவுத்ரி கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சோமா சவுத்திரி கோவா நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்கு மூலம் அளிக்க கோவா போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இருப்பினும் வாக்கு மூலம் அளிக்கும் நாள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.