அப்பாவிகளை வேட்டையாடும் நவீன் பட்நாயக் அரசின் "கோர முகம்"
புவனேஸ்வர்: அரசியலில் ஆளுமை மிக்கவர்களாக காட்டிக் கொள்வோரின் அரசு நிர்வாகங்களின் மறுபக்கம் பெரும்பாலும் கொடூரங்கள் நிறைந்ததாகவே இருப்பதுதான் வரலாறு.. இப்படிப்பட்ட "சரித்திரம் பேசும்" வரலாற்றில் ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக்கின் ஆட்சியும் இடம்பிடித்திருக்கிறது..
குலைல் இணையதளம் இது தொடர்பான விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், பழங்குடி இனத்தவர் என பலரையும் நேரில் சந்தித்து விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அந்த இணையதளம்.
குலைல் இணையதளம் நடத்திய விசாரணைகளில் எப்படியெல்லாம் அப்பாவிகள் மீது பொய்வழக்குகள் புனையப்பட்டிருக்கிறது? எப்படியெல்லாம் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என விவரிக்கிறது அந்த கட்டுரை. அக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:
530 சிறைக் கைதிகள்..
ஒடிஷாவின் பல இடங்களில் பொய்வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட 530 கைதிகளைப் பற்றிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 400 பேர் பழங்குடி இனமக்கள்.
எந்தெந்த மாவட்டங்களில்...
பாடிபடாவில் 32, ரூர்கேலாவில் 75, பலாங்கீரில் 18, கஜபதியில் 27, கந்தமாலில் 35, ராயகடாவில் 14, கோரபுட்டில் 70, மல்காங்கிரியில் 25, புவனேஸ்வரில் 6, க்யோஞ்சரில் 42, ஜெய்பூரில் 10, என நீள்கிறது சிறைவாசம் அனுபவிக்கும் அப்பாவிகள் பட்டியல். இவர்கள் 5 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கொட்டடியில் இருந்து வருகின்றனர்.
என்கவுன்ட்டர்..
கடந்த 10 ஆண்டுகளில் ஒடிஷாவில் 75 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி சுட்டுக் கொலை செய்திருக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி 5 பேரை மாவோயிஸ்டுகள் என சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் முக்கியமானது ஆராதி மாஜி என்ற இளம்பெண்ணின் வழக்குதான்..
ஆராதி மாஜி
கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்ட ஆராதி மாஜி என்ற இளம்பெண் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். ஆனால் அப்பெண் அனுபவித்த துயரத்துக்கு எந்த அரசுதான் பதில் சொல்லுமோ..
அதிகாலை 3 மணிக்கு கைது..
2010ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ந் தேதி அன்று கஜபதி மாவட்டத்தில் ஜாதிங்கி என்ற கிராமத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் ஆராதி மாஜி. அப்போது அவரது வீட்டு கதவை தட்டிய சி.ஆர்.பி.எப். படையினர் ஆராதி மாஜி மற்றும் அவரது உறவினர்களை நடுக்காட்டுக்கு இழுத்து சென்றனர்.
ஆபாசப்படம் காட்டி..
அங்கு நடுக்காட்டில் செல்போனில் ஆபாசபடங்களைக் காட்டியவாறே ஆராஜி மாஜியை சீரழித்துள்ளனர். அவர் மயங்கிய நிலையில் இருந்த போதும்கூட விட்டுவைக்கவில்லை. பின்னர் அவரை மாவோயிஸ்டு என முத்திரை குத்தி சிறையில் அடைத்தனர்.
கைது நடைமுறைகள்..
ஒரு பெண்ணை கைது செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய எந்த ஒரு முறை நடைமுறையையுமே கடைபிடிக்கவில்லை. அப்படி அநியாயமாக கைது செய்யப்பட்ட ஆராதி மீது பஸ் எரிப்பு வழக்கெல்லாம் கோர்த்துவிடப்பட்டது. பிரிவினைவாதம், நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல் போன்ற பல தேசத்துரோக குற்றச்சாட்டுகளையும் ஆராதி மாஜி சுமக்க நேரிட்டது. சாதாரண குற்றவியல் நடைமுறை வழக்கில் பின்பற்றப்படக் கூடிய எதுவுமே இந்த வழக்கில் பின்பற்றப்படவும் இல்லை.
அடுத்தடுத்து விடுதலை..
இதனாலேயே ஒவ்வொரு வழக்கில் இருந்தும் ஆராதி விடுவிக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் சுதந்திர பறவையாகி இருக்கிறார். இது ஒரு ஆராதி மாஜியின் தான் வாழ்க்கைதான்.. இது 500 சிறைக் கைதிகளின் வாழ்க்கைதான்..
கண்ணீர் கதைகள்..
ஆனால் கோராபுட், மல்காங்கிரி சிறைகளில் அடைபட்டிருக்கும் மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி பழங்குடிகளின் கண்ணீர்கதைகளின் சாப தூற்றலுக்கு அரசுகள் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்..