ஒவ்வொரு வேலைக்கும் ஒரு "ரூம்".. பரப்பன அக்ரஹாரா சிறையைப் பிரித்து மேய்ந்த சசிகலா "பவர்"!
பெங்களூர்: பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி ரூபா ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
பெங்களூர் சிறையின் சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, கடந்த வாரம் அச்சிறையில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு நடந்த முறைகேடுகள் குறித்து அவருக்கு தெரியவந்தது.
சசிகலா அறையில் தனி சமையலறை உள்ளிட்ட வசதிகள் இருப்பதும் தெரியவந்தது. சொகுசு வசதிகளுக்காக சசிகலா தரப்பில் இருந்து சிறை துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.
மாநில டிஜிபியிடம் அறிக்கை
இதுகுறித்து மாநில டிஜிபி தத்தாவுக்கு புகார் அறிக்கையாக அனுப்பினார் ரூபா. இந்த ஊழலில் சிறைத் துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
டிரான்ஸ்பர்
இந்த பதற்றமான நிலையில் ரூபா, புகாருக்குள்ளான சிறைத் துறை டிஐஜி சத்தியநாராயண ராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
5 அறைகள்
இந்நிலையில் சசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் இருப்பது டிஐஜி ஆய்வில் தெரியவந்துள்ளது. அதில் பார்வையாளரை சந்திக்க ஒரு அறையும், டிவி பார்க்க, யோகாசனம் செய்ய என ஒவ்வொரு அறையும் இருந்துள்ளது.
குக்கர் வைத்து சமையல்
மேலும் சிறையிலேயே சசிகலா குக்கர் வைத்து சமைக்கவும் வசதி செய்யப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. சிறையில் முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற அதிகாரி வினய் குமார் இன்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.