எதிரி நாடுகளின் கள்ள நோட்டு தாக்குதலை முறியடிக்கவே இந்த அறிவிப்பு.. பாரிக்கர் பாராட்டு
இந்திய பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் நோக்கத்தில் ஆயிரக்கணக்கான கோடி கள்ள ரூபாய் நோட்டுக்களை எதிரி நாடுகள் புழக்கத்தில் விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர
பானஜி: ஆயிரக்கணக்கான கோடி கள்ள ரூபாய் நோட்டுக்களை எல்லையில் இருந்து புழக்கத்தில்விட்டு, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தை சீர்குலைத்து இந்திய பொருளாதாரத்தையே நிலைகுலையச் செய்ய எதிரிநாடுகள் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்புப் பணம், ஊழல் சொத்து, பயங்கரவாத நிதி, போதை மருந்து பணம் ஆகிய நான்கு அசுரர்களை ஒழிக்கும் நோக்குடன் கடந்த 8-ம் தேதி நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார். இந்த அதிர்ச்சித் தகவல் எதிரி நாடுகளை ஆட்டம் காணச் செய்துள்ளது.
மேலும், கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் செய்வதறியாது கண் விழி பிதுங்கியுள்ளனர். இந்நிலையில் எதிரிநாடுகள் காஷ்மீர் மாநிலம், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டு இந்திய பொருளாதாரத்தை சீர்குலையச் செய்யும் சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பாரிக்கர் கூறினார்.
பானஜியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திவ்யம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பாரிக்கர் மேலும் கூறியதாவது:
எதிரி நாடுகள் காஷ்மீரில் சிறிய சிறிய தாக்குதல் நடத்தி மக்களை கொன்று வருவதுடன் நின்றுவிடாமல் இந்திய பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளதாக பாரிக்கர் கடுமையாக குற்றஞ்சாட்டினார். கருப்புப் பணம், பயங்கரவாத நிதி, ஊழல் சொத்து, போதை மருந்து பணம் ஆகிய நான்கு அசுரர்களுமே நாட்டை சீர்குலைத்து வருவதாகவும் அவர் குறை கூறினார். இவையே காஷ்மீர் தாக்குதல் வடமாநில நக்சலைட் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு காரணமாக இருப்பதாகவும அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் கள்ள நோட்டுக்களை இந்தியாவில் புழக்கத்தில் விடுவது புதிது அல்ல, ஆனால், கடந்த 8 -ம் தேதி நள்ளிரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்த உடன் அந்த கள்ள நோட்டுக்கள் எங்கு சென்றன எனத் தெரியவில்லை. அவைகள் அனைத்தும் காணாமல் போய்விட்டன என்றார் அமைச்சர் பாரிக்கர்.