கடந்த 80 ஆண்டுகளில் உலகை உலுக்கிய பயங்கர நிலநடுக்கங்கள்: ஒரு பிளாஷ்பேக்
டெல்லி: கடந்த 80 ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் என்று சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர்.
நேபாளத்தில் சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 80 ஆண்டுகளில் உலகை உலுக்கிய நிலநடுக்கங்களின் விவரம் வருமாறு,
நேபாள்
1934ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8.1 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பீகாரிலும் தெரிந்தது. இந்த நிலநடுக்கத்தால் நேபாள தலைநகர் காத்மாண்டுவும், பீகாரில் உள்ள முசாபர்நகரும் பெரும் சேதம் அடைந்தன. நிலநடுக்கத்தால் நேபாள் மற்றும் பீகாரில் சுமார் 19 ஆயிரம் பேர் பலியாகினர்.
சீனா
1976ம் ஆண்டு ஜுலை 28ம் தேதி வட சீனாவின் ஹெபீ மாகாணத்தில் இருக்கும் தாங்ஷான் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் சீன மக்கள் பலியாகினர். உலகின் மோசமான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
நேபாள்-பீகார்
1988ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி மீண்டும் நேபாள் மற்றும் பீகாரில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நேபாளில் 700 பேரும், பீகாரில் 250 பேரும் பலியாகினர்.
மகாராஷ்டிரா
1993ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாத்தூர் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் 52 கிராமங்கள் சேதம் அடைந்தன, சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகினர்.
குஜராத்
2001ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி அதாவது குடியரசு தினத்தன்று குஜராத் மாநிலம் பூஜ் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகினர், 4 லட்சம் வீடுகள் சேதம் அடைந்தன.
ஈரான்
2003ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ஈரானின் கெர்மான் மாகாணத்தில் உள்ள பாம் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 31 ஆயிரம் பேர் பலியாகினர்.
இந்திய பெருங்கடல்
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை 9.3 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதனால் சுனாமி ஏற்பட்டு இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள பல நாடுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகினர்.
காஷ்மீர்
2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 87 ஆயிரம் பேர் பலியாகினர். மேலும் சுமார் 28 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்.
சீனா
12.5.2008 அன்று சீனாவின் சிசுவான் மாகாணத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர், சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.
ஹைதி
12.1.2010 அன்று ஹைதியில் ஏற்பட்ட 7 அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 3 லட்சம் பேர் பலியாகினர். மேலும் நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 52 முறை ஆப்டர்ஷாக் நிலஅதிர்வு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான்
2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 18 ஆயிரத்து 900 பேர் பலியாகினர்.
நேபாள், பீகார்
25.4.2015 அன்று நேபாளத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கத்திற்கு இதுவரை 1,896 பேர் பலியாகியுள்ளனர். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து பீகார், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய இந்திய மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.