14வது நாளாக டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்.. நெடுவாசல் போல ஊத்தி மூட பாஜக திட்டம்?
14வது நாளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 14வது நாளாக தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்றும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் விவசாயம் முற்றிலும் முடங்கியுள்ளது. சுமார் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று 14வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாஜகவின் தந்திரம்
இந்நிலையில், அவர்களது போராட்டத்திற்கு நியாயமான பதிலை அளிக்காமல் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விவசாயிகளிடம் பேசி போராட்டத்தை நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு திரும்புமாறு அறிவுறுத்தினார். மேலும், தான் மத்திய அமைச்சரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தார்.
திரும்ப மாட்டோம்
மத்திய அரசில் இடம் பெற்றிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் என்ற முறையில், பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியதை கேட்டு, விவசாயிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டனர். ஆனாலும் ஒரு முடிவு கிடைக்கும் வரை ஊர் திரும்ப மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர். அவர்களது போராட்டத்தின் 7ம் நாளில் இது நடந்தேறியது.
ஏமாற்று வேலை
பொன். ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரம் கடந்துவிட்டது. இன்றைக்கு 14 நாட்களாக போராட்டத்தை நடத்துகிறார்கள் விவசாயிகள். இன்னமும் மத்திய அரசு இவர்களது கோரிக்கை என்னவென்று கூட கேட்கவில்லை. அப்படி என்றால் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இவர்களுக்கு அளித்த உறுதி என்ன? விவசாயிகள் இவரது பேச்சைக் கேட்டு 7வது நாளே தமிழகம் திரும்பி இருந்தால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டிருப்பார்கள்.
நெடுவாசல் போல்…
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை நெடுவாசல் கிராமத்தில் 22 நாட்கள் மக்கள் போராட்டம் நடைபெற்றது. அதனை நேரடியாக ஒடுக்காமல் தந்திரமாக பொன். ராதாகிருஷ்ணனை வைத்து பேச வைத்தது பாஜக அரசு. கிராம மக்களுக்கு விரும்பமில்லை என்றால் செய்ய மாட்டோம் என்று உறுதியளித்து போராட்டத்தை மக்கள் நிறுத்தி வைத்தனர்.
சதித் திட்டம்
ஆனால் தற்போது நிலை என்ன? ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தனியார் நிறுவனத்துடன் இன்று பாஜக அரசு கையெழுத்திடப் போகிறது. இதே போன்றே விவசாயிகளின் போராட்டத்தையும் பேச்சுவார்த்தையின் மூலம் முடக்க பொன். ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதா ராமன் போன்றவர்கள் பல தந்திரத் திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
வெற்றி நிச்சயம்
என்றாலும், விவசாயிகள் அனைவரும் அய்யாகண்ணு தலைமையில் சற்றும் சோர்ந்து போகாமல் பாஜக அரசின் நரித்தந்திரங்களுக்கு பலியாகாமல் தொடர்ந்து நூதனமுறையில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். "எங்களது கோரிக்கை வெற்றி பெறும் வரை தமிழகம் திரும்ப மாட்டோம்" என்ற உறுதியோடு போராடும் விவசாயிகள் தமிழக மக்களின் ஆதரவோடு நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.