உருது எழுத்தாளர்களின் கவிதைகளை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்குகிறது ராஜஸ்தான் பா.ஜ.க. அரசு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் இருந்து உருதுமொழி எழுத்தாளர்களின் கவிதைகளை நீக்குவதற்கு ஆளும் பாரதிய ஜனதா அரசு முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் பாரதிய ஜனதாவின் வசுந்தரராஜே சிந்தியா தலைமையிலான அரசு பாடப்புத்தகங்களை மாற்றி எழுதப் போவதாக அறிவித்தது. நமது நாட்டின் கலாசாரம், நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவோம் என அறிவித்தது ராஜஸ்தான் அரசு.
இது இந்துத்துவா கொள்கைகளைத் திணிக்கும் நடவடிக்கைதான் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் 3,4,5 ஆகிய வகுப்புகளின் இந்தி பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள உருது எழுத்தாளர்கள் இஸ்மத் சுக்தாய் மற்றும் சப்தார் ஹஸ்மி ஆகியோரது கவிதைகளையும் சிறுகதைகளையும் நீக்க ராஜஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கவிதைகள், கதைகளில் உருதுமொழி சொற்கள் மற்றும் இஸ்லாமியர் வாழ்வியல் முறை அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி இந்நடவடிக்கையை ராஜஸ்தான் அரசு மேற்கொள்ள இருக்கிறது. ராஜஸ்தான் அரசின் இந்நடவடிக்கை அம்மாநிலத்தில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.