பீகாரில் பாஜக தோற்க ஆர்எஸ்எஸ் காரணம்: லாலு பிரசாத் விளாசல்
பாட்னா: இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்ததை கேட்டு பீகார் மக்கள் கொந்தளித்துள்ளனர். அதனாலேயே பீகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தோல்வி தான் கிடைக்கும் என்று ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டசபைக்கு 5 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இன்று நடந்த 5வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 59.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்படுகின்றது.
இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்த தேர்தலில் நாங்கள் மோடியை பீகாரை விட்டே விரட்டிவிட்டோம். எங்களின் மகாகத்பந்தன் கூட்டணி 190 இடங்களில் வெற்றி பெறும். இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்ததை கேட்டு பீகார் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். அந்த அமைப்பாலேயே பாஜக கூட்டணி தோல்வி பெறும்.
ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எங்களுக்கு பின்னால் உள்ளனர். மோடிக்கு வெளிநாடுகளுக்கு செல்லவே நேரம் சரியாக உள்ளது. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். இம்முறை அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார்.