7ஆம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளுக்கு நாளை 7ஆம் கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 36 தொகுதிகளில் இரு தொகுதிகளின் வேட்பாளர்கள் உயிரிழந்துவிட்டதால் அந்த இரு தொகுதிகள் நீங்கலாக மற்ற 34 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 6 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 26, 29 ஆகிய தேதிகளில் மீதமுள்ள இரண்டு கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
5 கட்ட தேர்தல்கள் முடிந்த போதே கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் மீதமுள்ள 3 கட்டங்களை ஒன்றாக்கிவிடுமாறு தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும் தேர்தல் ஆணையம் ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து நாளைய தினம் காலை 7 மணிக்கு 7 ஆம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது.
பிஎம் கேர்ஸ் நிதியில் அரசு மருத்துவமனைகளில் 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க உத்தரவு
இந்த தேர்தலுக்காக 12,068 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 36 தொகுதிகளுக்கு 7ஆம் கட்டமாக நாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் ஜாங்கிபூர் மற்றும் சாம்செர்கஞ்ச் ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்கள் இறந்துவிட்டனர். இதனால் அந்த இரு தொகுதிகள் நீங்கலாக மற்ற 34 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அந்த இரு தொகுதிகளுக்கு மே 16ஆம் தேதி தேர்தல் நடத்தி மே 19 இல் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
பாஜக சார்பில் மம்தா பானர்ஜி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்டது. அது போல் பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, கொரோனா பெருந்தொற்று, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுத்து வருகிறார்கள்.