சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பெங்களூரு போலீஸ் தீவிர ஆய்வு - விசாரணையில் இணைந்தது என்.ஐ.ஏ
பெங்களூரு: பெங்களூரில் நேற்று நடந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது குறித்து இதுவரை உருப்படியான துப்பு ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
பெங்களூரு சர்ச் சாலையில் நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்பில் விடுமுறைக்காக பெங்களூர் வந்திருந்த சென்னையைச் சேர்ந்த பவானி என்ற 37 வயதுப் பெண் உயிரிழந்தார். அவரது உறவினர் கார்த்திக் (21) உள்பட இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
செல்போன் டவர் தகவல்கள்
சர்ச் சாலை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் பதிவான தகவல்களை வைத்து செல்போன் பேச்சுக்களை போலீஸார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர். குண்டுவெடிப்பின்போது அந்தப் பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன்களின் தகவல்களை வைத்து ஏதாவது தேவையான தகவல் கிடைக்குமா என்று போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
நேற்று இரவு சரியாக 8.38 மணிக்கு குண்டு வெடித்தது. அந்த குண்டானது, ஒரு தெலுங்கு செய்தித் தாளில் மடித்து வைத்து துணியில் இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. அந்த குண்டில் உள்ள டைமரில் 8.38 மணிக்கு குண்டு வெடிக்கும் வகையில் செட் செய்து வைத்திருந்தனர். இதுகுறித்து தடயவியல் நிபுணர்களும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிசிடிவி கேமரா பதிவுகள்
இதற்கிடையே, எம்.ஜி. சாலை, பிரிகேட் சாலை, மியூசியம் சாலை, சர்ச் சாலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் வைத்துள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீஸார் திரட்டி வருகின்றனர். அதில் சந்தேகப்படும்படியான நபர்களோ அல்லது வாகனங்களோ இடம் பெற்றுள்ளதா என்று ஆராயப்பட்டு வருகிறது. ஆனால் குண்டுவெடிப்பு நடந்த கோக்கோனெட் குரோவ் ஹோட்டலுக்கு முன்பு எந்த கேமராவையும் அந்த ரெஸ்டாரென்ட் வைக்கவில்லை. இதனால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
விசாரணையில் இணைந்தது என்.ஐ.ஏ
இதற்கிடையே, பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது. தேசிய புலனாய்வு ஏஜென்சியின் விசாரணைக் குழு ஒன்று பெங்களூர் வந்து விசாரணையில் இணைந்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்தையும் விசாரணையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.