மூன்று நாடுகளில் ஒரே ஸ்டைல் தாக்குதல்.. உலகை உலுக்க போகும் ஐஎஸ்ஐஎஸ்!
டெல்லி: பிரான்ஸ், துனிசியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் நேற்று ஒரே நாளில் ஒரே ஸ்டைலில் தாக்குதலை அரங்கேற்றி 65 பேரை கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் அல்லது அதன் ஆதரவு தீவிரவாதிகள்.
பிரான்சில் நடைபெற்ற தாக்குதல் அந்த நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகள் மிக ஆழ வேரூன்றி விட்டார்கள் என்பதையும், குவைத்தில் நடந்த தாக்குதல், ஷியா பிரிவு முஸ்லிம்கள் முக்கிய இலக்காக இருப்பதையும் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
கொண்டாட்ட தாக்குதல்
துனிஷியாவில் நடத்தப்பட்ட தாக்குதல், பிறரின் கவனத்தைதங்கள் பக்கம் திருப்பும் நோக்கத்தில் நடந்துள்ளதாக கூறுகின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள். இஸ்லாமிய நாடை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிரகடனப்படுத்திய ஓராண்டு 'கொண்டாட்டத்தையொட்டி' இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இல்லாமலே தாக்குதல்
ஐஎஸ்ஐஎஸ் ஈராக்கிலும், சிரியாவிலும் ஆதிக்கம் செலுத்திவந்தாலும், அவர்கள் இல்லாமலே கூட உலகின் எந்த நாட்டிலும், தேவைப்படும் நேரத்தில் தாக்குதலை நடத்தும் ஆற்றலை பெற்றுள்ளனர் என்பதை மேற்கண்ட தாக்குதல்கள் அம்பலப்படுத்துகின்றன. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வேரூன்றி தாக்குதல்கள் நடத்துவதைவிட, அவர்களின் அனுதாபிகள், தங்கள் நாட்டிலேயே தாக்குதலை நடத்தி மக்களை கொன்றொழிப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள்.
ஸ்டைல் ஒன்றே
பிரான்சில் நடைபெற்ற தாக்குதலில் ஈடுபட்டவன் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியா என்பதில் உறுதியற்றதன்மை இருந்தபோதிலும், அவன் தாக்குதல் நடத்திய விதம், ஐஎஸ்ஐஎஸ் ஸ்டைலை ஒட்டியே உள்ளது தெரியவந்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் lone wolf தாக்குதல்கள் என்று அழைக்கப்படுகின்றன. தீவிரவாத இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்களுக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு தாங்கள் சார்ந்த நாட்டிலேயே தாக்குதலை சிலர் திடீரென நடத்துவது இந்த வகை தாக்குதலாகும். இது இளைஞர்களையும் தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கச் செய்யும் பாதையாகும்.
பதிலடி தேவை
ஈராக் மற்றும் சிரியாவில் தீவிரவாதம் வளர்வது பிற நாடுகளுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியதுதான் என்கின்றனர் பாதுகாப்பு துறை வல்லுநர்கள். அந்த தீவிரவாத இயக்கத்திற்கு பலத்த அடி கிடைக்காதவரை, உலகளவில் இதுபோன்ற தாக்குதல்களுக்கு அப்பாவிகள் பலியாவது தொடர் கதையாகிவிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
குவைத் மோசம்
வரும் மாதங்களில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மிக மோசமான தாக்குதலுக்கு குவைத் உள்ளாக கூடும் என்று பல நாட்டு பாதுகாப்பு வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவுக்கும் இது தெரியும். ஆனால், யாரும் எந்த தடுப்பு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முதலில் ஷியாவுக்கு எதிரான தாக்குதலாக ஆரம்பித்து குவைத்தை கைப்பற்றும் திட்டம் தீவிரவாதிகளுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒடுக்க வழி
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை, சன்னி இஸ்லாமை காப்பாற்ற வந்தவர்களாக ஈராக் மற்றும் சிரியா நாட்டு மக்கள் எண்ணுகிறார்கள். இதேபோன்று பல நாட்டு சன்னிகளும் நினைக்கிறார்கள். சதாம் உசேனுக்கு பிறகு ஈராக்கில் அமைந்த ஷியா அரச தலைமை, தங்களை ஏமாற்றிவிட்டதாக ஈராக் மக்கள் கருதுகிறார்கள். எனவே தங்களை மீட்க வந்தவர்களாக ஈராக் மக்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை புகழ்கிறார்கள். இதன் தாக்கம் உலகமெங்குமுள்ள சன்னி முஸ்லிம்களுக்கு உற்சாகத்தை கொடுக்கிறது. எனவே, ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அகற்றப்படாத வரை உலகிற்கு ஆபத்து தொடரத்தான் செய்யும்.