துருக்கி நிலக்கரி சுரங்க வெடிவிபத்து: 201 பேர் பலி: பலர் படுகாயம்
துருக்கி: மேற்கு துருக்கியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து மற்றும் தீ காரணமாக பலியானோர் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு எரிசக்தித் துறை அமைச்சர் டேனர் இல்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் பலர் சுரங்கத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கு துருக்கியின் மனிசா மாகாணம் சோமா நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
உடனடியாக அங்கு பணியில் இருந்தவர்கள் அலறிஅடித்து அங்கும் இங்குமாக ஓடினர். தீ பிடித்ததால் உள்ளே இருந்தவர்களால் வெளியே வரமுடியாமல் சிக்கி தவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்தது. மீட்பு படைனர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 200 பேர் பலியாகியுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர்கள் உள்ளே இன்னும் சிக்கி தவிக்கின்றனர் என்றும் மனிசா மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் 100க்கும் மேற்பட்டவர்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். இதுவரை 360 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
80 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேரது நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து பற்றி கேள்விப்பட்டதும் சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தினர் சுரங்கப் பகுதிக்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மருத்துவமனைக்கு வெளியிலும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். உயிருடன் மீட்கப்பட்டவர்களுக்கு அவர்களது பெற்றோர்கள் முத்தமிட்டு அழைத்து சென்றனர்.
சுரங்கத்திற்குள் சிக்கிருப்பவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க உள்ளே சுத்தமான காற்று செலுத்தப்படுகிறது. இதற்கிடையே நிலக்கரி சுரங்கத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.
இஸ்தான்புல் நகருக்குத் தெற்கே 250 கிமீ தொலைவில் உள்ள சோமாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட இந்த விபத்து துருக்கி சுரங்க விபத்து வரலாற்றில் மிக மோசமான விபத்து என்று கூறப்படுகிறது.
சுரங்கத் தொழிலாளர்கள் ஷிப்ட் மாற்றும்போது இந்த விபத்து ஏற்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
கார்பன் மோனாக்சைடு கசிவினால் இந்த மரணங்கள் ஏற்பட்டதாக இல்டிஸ் தெரிவித்தார். மின்வினியோக யூனிட் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீயினால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டு ஏற்பட்ட இதே போன்ற விபத்தில் 263 பேர் பலியானதற்குப் பிறகு துருக்கி வரலாற்றில் மிக மோசமான சுரங்க விபத்து இது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.