2016ம் ஆண்டின் ஆயுசு ஒரு விநாடி அதிகரிப்பு... !
லண்டன்: 2016ம் ஆண்டு லீப் ஆண்டு என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த வருடத்தின் ஆயுளும் கூட ஒரு விநாடி அதிகரித்துள்ளது. அதாவது டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு நேரமானது இந்த வருடத்திற்கு 11:59:60 என்று இருக்கும். வழக்கமாக இது 11:59:59 என்றுதான் இருக்கும்.
எனவே இந்த ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் ஒரு விநாடி கூடுதலாக நீடிக்கும். உலக அளவிலான நேரத்தை ஐஇஆர்எஸ் எனப்படும் சர்வதேச புவி சுழற்சி கண்காணிப்பு மையம்தான் கண்காணித்து, நிர்ணயித்து வருகிறது. இந்த அமைப்புதான் இந்த ஆண்டு ஒரு விநாடி கூடுதலாக இடம் பெறுவதாக அறிவித்துள்ளது.
பூமியின் சுழற்சியில் ஏற்படும் பல்வேறு மாறுதல்களை அடிப்படையாக வைத்து நிமிடம், நொடி உள்ளிட்டவற்றை இந்த அமைப்பானது நிர்ணயிக்கிறது, மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில் சர்வதேச நேரங்களுக்கு முரண்பாடு ஏற்படாத வகையில் தற்போது ஒரு நொடி கூடுதலாக்கப்பட்டுள்ளது.
பூமியின் சுழற்சி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதால்தான் இந்த நேர மாற்றம் அவசியமாகிறது. குறிப்பாக புவி ஈர்ப்பு சக்தி, பூமியில் ஏற்படும் மிகவும் சக்தி வாய்ந்த பலத்த நிலநடுக்கம் போன்றவை பூமியின் சுழற்சியை மாற்றி விடுகின்றன. இதை சரி செய்ய நொடிகளைக் கூட்டி குறைத்து நேரத்தை சரி செய்கிறார்கள்.
இந்த விநாடி நேர மாற்றத்தை செய்யாவிட்டால் முதலில் குழம்பிப் போவது கம்ப்யூட்டர் கட்டமைப்புகள்தான். எனவேதான் நிமிட, நொடி மாறுதல்கள் முக்கியமாகிறது.
மேலும் இதுபோன்ற நேர மாறுதல்களை ஆறு மாதத்திற்கு முன்பே ஐஇஆர்எஸ் அறிவித்து விடும். அதாவது ஜூன் அல்லது டிசம்பரில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படும். கடந்த 1972ம் ஆண்டிலிருந்து இதுவரை 26 லீப் விநாடிகளை அறிவித்துள்ளது ஐஇஆர்எஸ். கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ஒரு லீ்ப் விநாடியை அது அதிகரித்தது.