டேங்கர் லாரி மீது பேருந்து மோதி விபத்து: 40 பேர் எரிந்து சாம்பல்
இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று இரண்டு பேருந்துகளின் மீது ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 40 பேர் பலியாகினர்.
பலுசிஸ்தான் நெடுஞ்சாலை ஒன்றில் 100 பயணிகளுடன் வந்த இரண்டு பஸ்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முயன்றனர். அப்போது எதிரே வேகமாக வந்துக் கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது இரண்டு பஸ்களும் அடுத்தடுத்து பயங்கரமாக மோதின.
மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதிலிருந்து பரவிய தீ பஸ்களையும் பற்றிக் கொண்டதால் பயணிகளில் 40 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
ஏராளமானோர் படுகாயங்களுடன் ஹப் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் பலரது உடல்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் கரிக்கட்டையாக காணப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்துக்களில் இது மிகவும் மோசமான விபத்து என்று வர்ணிக்கப்படுகிறது.