பாம்புகளை முத்தமிட்ட அபு... ராஜ நாகம் கடித்து மரணம்
பாம்புகளுடன் விளையாடும் அபு ஜாரின் ஹூசைன் கிங் கோப்ரா பாம்பு கடித்து சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
Recommended Video
கோலாலம்பூர்: பாம்புகள் எங்கிருந்தாலும் அவற்றை பிடித்து பத்திரமாக வனத்தில் விடும் தீயணைப்புத்துறை வீரர் அபு விஷமுள்ள ராஜ நாகம் கடித்து மரணமடைந்துள்ளார். பாம்புகளின் காதலன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். 33 வயதான அபு ஜாரின் ஹூசைனுக்கு பாம்புகள் என்றாலே கொள்ளை பிரியம். அள்ளி அணைத்துக்கொள்வார், முத்தமிட்டு கொஞ்சி மகிழ்வார்.
கோலாலம்பூர் தீயணைப்பு துறையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர். தீயணைப்பு துறையில் மீட்புப்பணியோடு மட்டுமல்லாமல், பாம்புகள் பிடிப்பதிலும் வல்லவர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள பாம்புகளை கொல்லாமல், அதை பாதுகாப்பாக பிடித்து வந்து உயிரியல்பூங்காவில் விடும் பணியையும் செய்து வந்தார்.
ராஜ நாகம் கடித்தது
கடந்த 4 நாட்களுக்கு முன் ஒரு இடத்தில் விஷம் கக்கும் ராஜ நாகம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதைப்பிடிக்கும் முயற்சியில் ஹூசைன் ஈடுபட்டு இருந்தபோது, அவரை பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹூசைன், 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
உலா வரும் பாம்புகள்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஹூசைன் வீட்டிலும் சர்வசாதாரணமாக பாம்புகள் உலாவரும். பாம்புகளுடன் சகஜமாகப் பழகினார். மக்கள் மத்தியில் பாம்பு காதலர் என்று செல்லமாக அழைக்கப்பட்டார் ஹூசைன்.
பாம்புகளுடன் விளையாட்டு
பாம்புக்கு முத்தம் கொடுப்பதும், மூக்கில் பாம்பை நுழைத்து, வாய் வழியாக எடுப்பதும், ராஜநாகத்துடன் படுத்து தூங்குவதும், அருகில் வைத்து புத்தகம் படிப்பதும், சாப்பிடுவதும் என சகஜமாக பாம்புகளுடன் பழகிய வீடியோக்கள் இணைதளத்தில் ஹிட் அடித்துள்ளன.
சாகச நிகழ்ச்சிகள்
பல்வேறு சாகச நிகழ்ச்சிகலையும் பாம்புகளை வைத்து ஹூசைன் நடத்தியுள்ளார். மிகக் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம், விஷம் கக்கும் நாகம், மாம்பா எனப்படும் ஆஸ்திரேலியன் வகை கொடிய விஷப் பாம்புகளை வைத்து ஹூசைன் செய்த சாகசக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமாகும்.
அபுவை கடித்த பாம்பு
அபு ஜுரின் பாம்பு பிடிக்கும் கலையை தனது தந்தையிடம் இருந்து கற்றுள்ளார். இதற்கு முன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அபுஜூரினை பாம்பு கடித்து இரண்டு நாட்கள் கோமா நிலைக்கு சென்று உயிர் பிழைத்துள்ளார். இம்முறை கடித்த பாம்பு அவரது உயிரை காவு வாங்கி விட்டது.
சோகத்தில் நண்பர்கள்
அபு ஜூரின் தான் மட்டுமல்லாமல், தன்னுடன் பணியாற்றும் சகஊழியர்களுக்கும் பாம்பு பிடிக்கும் கலையை கற்றுக்கொடுத்து, விழிப்புணர்வு ஊட்டி வந்துள்ளார். அவரது மரணம் உடன் பணி செய்தவர்களை கண் கலங்க வைத்துள்ளது. இந்த பாம்பின் விஷம் ஒரு யானையை கொல்லும் அளவுக்கு கொடூரமானதாகும். மிகச்சிறந்த அதிகாரியை இழந்துவிட்டோம், சோகமான தருணமாகும் என்று உடன் பணி செய்யும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாம்பு நாயகன்
முதலைகளுடன் சாகசம் நடத்திய ஸ்டீவ் இர்வின் கடந்த 2006 ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி, ஆஸ்திரேலிய கடற்பகுதியில் 'ஆபத்தான கடல் விலங்கினங்கள்' பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது, கொட்டும் திருக்கைமீன் மார்பில் கொட்டியதில், மரணத்தை தழுவினார். அதே போல ஒரு மரணம் பாம்புகளின் காதலன் அபுவிற்கு பாம்பின் மூலம் நிகழ்ந்துள்ளது என்பதுதான் சோகம்