கனடாவில் திடீரென வானத்தில் தோன்றிய வண்ணம்.. மர்ம "அரோரா" ஒளி.. பின்னணியில் பரபர காரணம்
ஓட்டாவா: கடந்த 8ம் தேதி சூரியப் புயல் ஒன்று பூமியை கடந்து சென்ற நிலையில், கனடாவின் வான் வெளியில் எதிர்பாராத விதமாக அரோரா தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக இந்த அரோரா ஒளி பூமியின் வட மற்றும் தென் துருவத்தில் மட்டுமே தோன்றும் நிலையில் வட துருவத்திற்கு ஒட்டியுள்ள கனடாவில் அதிசயமாக உருவாகியுள்ளது.

இந்த அரோரா ஒளி நடனம் சுமார் 40 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை நீடித்திருந்ததாக அதைக் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக அரோரா என்பது, வட, தென் துருவங்களை ஒட்டிய பகுதிகளில் தோன்றும் ஓர் அபூர்வ ஒளித் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது. இந்த ஒளித் தோற்றம், உலகம் தோன்றிய காலம் தொட்டே காணப்படுவதாக அறிவியலாளர்கள் கருதுகின்றனர். சூரியனிலிருந்து வெளிவரும் சூரிய துகள்கள் அதிகமான எண்ணிக்கையில் வெளிவரும்போது பூமியை கடந்து பிரபஞ்சத்தில் பயணிக்கும். பூமிக்கு வரும்போது, இரு துருவப் பகுதிகளையும் நோக்கி இவை இழுக்கப்படுகின்றன.
இவ்வாறு இழுக்கப்படும் இந்த துகள்கள் அந்தப் பகுதி வளிமண்டலத்தில் இருக்கும் சில வாயுக்களுடன் மோதி புதிய ஆற்றல் ஒன்றை உருவாக்கும். இவ்வாறு ஆற்றல் உருவாக்கப்படும்போது ஒளிச்சிதறல் தோன்றும். இவை வானத்தில் ஒளி நடனம் போல காட்சியளிக்கும். இந்த ஒளிச் சிதறல் தோன்றும் உயரத்தைப் பொறுத்து, அந்த உயரத்தில் வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களின் கலவையைப் பொறுத்து, இந்த ஒளித்தோற்றத்தின் நிறமும் மாறும். பச்சை, சிவப்பு, நீலம், ஊதா போன்ற நிறங்களில் இவை பிரதிபலிக்கும்.
இந்நிலையில் வட துருவத்தையொட்டி உள்ள கனடா நாட்டில் கடந்த 8ம் தேதி இந்த அரோரா ஒளி நடனம் தோன்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே தேதியில் சூரியப் புயல் பூமியை கடந்து சென்ற நிலையில் இந்த ஒளித் தோற்றம் உருவாகியுள்ளது. அதேபோல இது சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்துள்ளதாக இதை பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்த ஒளி ஊதா நிறத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 3000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பூமியின் காந்த மண்டலத்தில் பயணிக்கும் சூரிய கதிர்கள் அங்குள்ள வாயுக்களோடு வினைபுரிந்து இந்த நிறத்தை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. இவ்வாறான அரோரா நடனங்கள் முதன் முதலாக 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதியும், இதனையடுத்து அதே ஆண்டில் செப்டம்பர் 2ம் தேதியும் பதிவு செய்யப்பட்டன. இதில் செப்டம்பர் மாதம் தோன்றிய ஒளியானது மிகவும் பிரகாசமாக இருந்ததாக அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்த மக்களும், கப்பல் மாலுமிகளும், அறிவியல் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications