கென்ய பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவ மாணவர்களை தேடிப்பிடித்து தலையை துண்டித்த தீவிரவாதிகள்
நைரோபி: கென்யாவில் உள்ள காரிசா பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கிறிஸ்தவ மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் சோமாலியாவின் எல்லையையொட்டி உள்ள காரிசா பல்கலைக்கழகத்திற்குள் வியாழக்கிழமை அதிகாலை 4 முகமூடி அணிந்த தீவிரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 147 பேர் பலியாகினர், 79 பேர் காயம் அடைந்தனர். பலியானவர்களில் மாணவர்களை தவிர 2 போலீஸ் அதிகாரிகள், ஒரு ராணுவ வீரர் மற்றும் 2 காவலாளிகள் அடக்கம்.
பல்கலைக்கழகத்திற்குள் தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகளையும் ராணுவத்தினர் 13 மணிநேரம் போராடி சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் தங்கள் உடம்பில் குண்டுகளை கட்டியிருந்ததால் ராணுவத்தினர் சுட்டதும் அந்த குண்டுகள் வெடித்துச் சிதறின. தீவிரவாதிகள் பல்கலைக்கழக வளாகத்தில் தங்கியிருந்த கிறிஸ்தவ மாணவ, மாணவியராக தேடிப் பிடித்து கொலை செய்துள்ளனர். அதிலும் கிறிஸ்தவ மாணவர்கள் பலரை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
அவர்கள் அதிகாலை தாக்குதல் நடத்தியபோது பல்கலைக்கழக வளாகத்தில் தொழுது கொண்டிருந்த முஸ்லீம் மாணவர்களை தீவிரவாதிகள் எதுவும் செய்யவில்லை. இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டிக் கொடுத்த அல் ஷபாப் தீவிரவாதி முகமது மகமூது என்ற துல்யாதின் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடியே 33 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று கென்ய அரசு அறிவித்துள்ளது.
கென்ய மண்ணில் கடந்த 17 ஆண்டுகளில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல் இது தான். முன்னதாக 1998ம் ஆண்டு நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தாக்கியபோது 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.