கண் கலங்க வைத்த காங்கோ தமிழர்கள்.. அனிதாவுக்காக இரங்கல் கூட்டம் நடத்தி நெகிழ்ச்சி
கின்ஷாசா: காங்கோவில் வாழும் தமிழர்கள் திரண்டு தமிழகத்தின் செல்ல மகள் அனிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டு, மருத்துவராக முடியாத வேதனையில் கடந்த ஒன்றாம் தேதி தற்கொலை செய்துகொண்டார் தமிழகத்தின் செல்ல மகள் அனிதா.
அவருக்கு உலகம் முழுவதும் தமிழர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உலக அளவில் தமிழர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் அனிதாவுக்கு இரங்கல் செலுத்தியுள்ளனர் தமிழர்கள். இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அனிதா மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அங்குள்ள தமிழர் நடத்தும் EIS பள்ளி வளாகத்தில் அனிதாவின் புகைப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி இறுதி மரியாதை செய்த போது அந்த மெழுகுவர்த்திகளும் எங்களோடு சேர்ந்து கலங்குவதாக இருந்தது.
இந்த செய்தியை நமக்கு அனுப்பிய நமது வாசகர் செளந்தரராஜன் அனிதா குறித்து எழுதியுள்ள உருக்கமான இரங்கற் பா.
தூக்கில் தொங்கியது நீயில்லை அனிதா!
நாங்கள் எல்லோரும் தூக்கில் தொங்கியது நீ மட்டும் தான் என்று பதறினோம். கொஞ்சம் யோசித்து பார்த்தால்,
தூக்கில் தொங்கியது நீ மட்டுமல்ல,
கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை, அது சலுகையல்ல என்பதை மறந்து போன கயவர்களும் தான்.
தூக்கில் தொங்கியது நீ மட்டுமல்ல,
நகரத்து மாணவனுக்கு கிடைக்கும் கல்வி, படிக்கும் வாய்ப்புகள் கிராமத்து மாணவர்களுக்கு கிடைப்பதல்ல என்பதை மறைத்து, அதையும் மீறி புலியாய் படித்த உன் திறமையை நீட்டோடு பொருத்தி குறைத்து மதிப்பிடும் கயவர்களின் குள்ளநரித் தனமும் தான்.
தூக்கில் தொங்கியது நீ மட்டுமல்ல,
மனப்பாடம் செய்தே மந்திரங்களைச் சொல்லி மக்களை மாக்களாக நடத்தியவர்கள், நீ எடுத்த மதிப்பெண் மனப்பாடம் செய்து கிடைத்தது என்று சொல்லி உன்னைச் சிறுமைப் படுத்தியவர்களும் தான்.
தூக்கில் தொங்கியது நீ மட்டுமல்ல,
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக சக மக்களை படிக்க அனுமதிக்காமல், தாங்கள் மட்டுமே படித்து அறிவாளிகளாகக் காட்டிக் கொண்டிருப்பவர்களும் தான்.
தூக்கில் தொங்கியது நீ மட்டுமல்ல,
நீட் வராது, விலக்கு வாங்கிவிடுவோம் என்று சொல்லி டெல்லிக்கு போய், அங்கே வருமான வரித்துறை வழக்குகள் பாயாமல் பார்த்துக் கொண்ட மாநில ஆட்சியாளர்களும் தான்.
தூக்கில் தொங்கியது நீ மட்டுமல்ல,
இங்கே ,ஓராண்டு விலக்கு கேட்டால் ஒத்துழைப்போம் என்று சொல்லிவிட்டு, கோர்ட்டில்,அதெல்லாம் விலக்கு அளிக்கும் எண்ணமில்லை என்று சொல்லி புரளிய இரட்டை நாக்குகளும் தான் .
தூக்கில் தொங்கியது நீ மட்டுமல்ல,
எல்லாவற்றிற்கும் மேலாக, இரு தரப்பிற்கும் பாதிப்பில்லாமல் ஒரு தீர்வோடு வாருங்கள் என்று கேட்டுவிட்டு, ஒருபக்க சார்பு முடிவோடு வந்த போது, அப்பு இன்னொரு தரப்பின் பாதிப்புக்கு என்று கேட்க வேண்டிய இடத்தில் மவுனித்து போன நீதி தேவதையும் தான்.
என்ன,
சூடு சொரணை இருந்த நீ தூக்கில் தொங்கியவுடன் மரணித்துப் போனாய்.
மேல் சொன்ன எதுவுமே இல்லாமல் கனத்த தோலாய் மாறிப்போனதால் மற்றவைகள் பிணமாய் இங்கே உலவுகின்றன.
காங்கோவிலிருந்து கண்ணீருடன், சௌந்தரராஜன்.