ஐரோப்பிய நாடுகளை வறுத்தெடுக்கும் வரலாறு காணாத கோடை.. அனல் காற்றால் மக்கள் அவதி!
லண்டன்: ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுவதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இதமான தட்பவெப்பத்துக்கு பெயர்போன ஐரோப்பியாவின் பல நாடுகளிலும், நகரங்களிலும், இப்போது வெப்ப காற்று வீசி வருகிறது. லண்டனில் அதிகபட்ச வெப்ப நிலை 33 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. ஐரோப்பாவின் பல இடங்களிலும் இது 40 டிகிரி செல்சியசை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹனிமூன் புகழ் சுவிட்சர்லாந்தில் கூட மக்கள் வெப்பத்தில் சிக்கி ஆவி பறக்க அலைகின்றனர். நீர் நிலைகளில் நீச்சலடித்தபடி தங்கள் உடல் சூட்டை அவர்கள் தணித்து வருகின்றனர். ஸ்பெயின் அரசு, தனது நாட்டு மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்து, வெப்பத்தில் இருந்து காப்பாற்ற அறிவுரை கூறியுள்ளது.
உலகம் வெப்பமயமாவதன் எதிரொலிதான், இதுபோன்ற வெப்ப நிலை மாற்றம் என்று எச்சரித்துள்ளது, ஐக்கிய நாடுகள் சபை. ஐரோப்பிய வரலாற்றில் இந்த கோடைதான் வெப்பத்தால் சா(சோ)தனை படைக்க உள்ளது என்று அந்த நாட்டு வானிலை இலாகா வட்டாரங்கள் பீதி கிளப்புகின்றன.