மீனவர்கள் கொலை வழக்கு: கடற்படை வீரர்களை விடுவிக்க ஐ.நா.விடம் இத்தாலி முறையீடு!
நியூயார்க்: இந்திய மீனவர்கள் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இத்தாலி கடற்படை வீரர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபையிடம் இத்தாலி முறையீடு செய்துள்ளது.
கேரளா அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 2 பேரை, கடந்த 2012-ம் ஆண்டு இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதைத்தொடர்ந்து இத்தாலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இத்தாலி சென்ற இருவரும் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் மீண்டும் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது இத்தாலி தூதரகத்தில் தங்கியிருக்கும் அவர்கள் மீது இந்திய கடற்படை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இத்தாலி வீரர்கள் மீதான வழக்கில் கடற்கொள்ளை தடுப்பு சட்டப்பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இந்த சட்டத்தின் மூலம் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையிடம் இரு கடற்படை வீரர்களையும் விரைவில் விடுவிக்க உதவ வேண்டும் என கோரி இத்தாலி அரசு முறையீடு செய்துள்ளது.