Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2014 பிளாஷ்பேக்: உலக நாடுகளை மிரட்டிய 'ஐ.எஸ்.ஐ.எஸ்.' பயங்கரவாத இயக்கம்!

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: சிரியாவில் கிளர்ச்சிக் குழுவாக இருந்த இயக்கங்கள் ஒன்றிணைந்து 'ஐ.எஸ்.ஐ.எஸ்' என்ற பயங்கரவாத இயக்கமாக உருவெடுத்து உலகை நாடுகளை அதிர்ச்சியும் மிரட்சியும் அடைய வைத்த ஆண்டு 2014.

2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஈராக்கின் பலூஜா, ரமாடி ஆகிய நகரங்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியது. அதன் பின்னர் ஜூன் மாதம் ஈராக்கின் வடக்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கினர். சில நாட்களிலேயே ஈராக்கின் 2வது மிகப் பெரிய நகரான 'மொசூல்' தீவிரவாதிகள் வசமானது.

மொசூல் நகரத்தை விட்டு ஈராக் அரசு படைகள் வெளியேறின. அந்த நகரத்தின் மத்திய வங்கியிருந்த பல நூறு கோடி ரூபாயை கபளீகரம் செய்தது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். அடுத்தடுத்து ஈராக்கின் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து முன்னேறியது.

இந்த அமைப்பின் மற்றொரு பிரிவினர் தலைநகர் பாக்தாத்தை நோக்கியும் முன்னேற எங்கே ஒட்டுமொத்த ஈராக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வசமாகிவிடுமோ என்ற பதற்றம் உலக நாடுகளை உலுக்கியது. இந்த நிலையில் சிரியாவிலும் ஈராக்கிலும் தங்கள் வசம் உள்ள நகரங்களை ஒன்றிணைத்து "இஸ்லாமிய தேசம்" என்ற புதிய நாட்டை பிரகனடப்படுத்தியது இந்த இயக்கம்.

இதன் தலைவராக அதாவது கலிபாவாக அபு பக்கர் அல் பக்தாதி அறிவிக்கப்பட்டார். அத்தனை இஸ்லாமியர்களுமே பக்தாதியின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் பிரகனடப்படுத்தப்பட்டது. இதன் பின்னர்தான் இந்த இயக்கத்தின் மிகக் கொடுமையான பயங்கரவாத காட்டுமிராண்டித்தனமான முகம் வெளிப்படத் தொடங்கியது.

Flash back 2014: World's biggest threat ISIS

தாங்கள் கைப்பற்றிய நகரங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் பலரும் நூற்றுக்கணக்கில் பிணைக்கைதிகளாக்கப்பட்டனர். அந்த நகரங்களில் வசித்து வந்த பிற மதத்தவர் கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும்; இல்லையெனில் மிகப் பெருந்தொகையான வரி கட்ட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை மறுத்தவர்களும் நிராகரித்தவர்களும் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

வடக்கு ஈராக்கில் ஜூமர், சிஞ்ஜார், வானா மற்றும் திக்ரிக் என பல நகரங்கள் இந்த தீவிரவாதிகள் வசமாகின. சிஞ்ஜாரை இந்த தீவிரவாதிகள் கைப்பற்றிய போது அங்கிருந்த யாசிதிகள் மிக மோசமாக வேட்டையாடப்பட்டனர். உயிர்பிழைத்து பாலைவன மலைகளில் தஞ்சமடைந்தனர் பல்லாயிரக்கணக்கான யாசிதிகள். குடிக்க நீரின்றி பசியாலும் பட்டினியாலும் யாசிதிகள் பாலைவன மலைகளில் மரணித்துப் போயினர். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளோ, தப்பி ஓடிய யாசிதிகளை படுகொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தது.

இது உலகை அதிரச் செய்தது. வேறுவழியின்றி உலக நாடுகள் மீண்டும் ஈராக் வான் பரப்புக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் அமெரிக்காவின் வான்படை நுழைந்தது. பாலைவன மலைகளில் சிக்கித் தவித்த யாசிகளுக்கு நீரும் உணவுப் பொருட்களும் விநியோகிக்கப்பட்டன. அடுத்த கட்டமாக அவர்களை முற்றுகையிட்டிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அமெரிக்காவின் இந்த போரில் குர்து இனப்படையும் இணைந்து கொண்டது.

அமெரிக்காவும் குர்து இன அரசு படைகளுக்கு ஆயுதங்களை வழங்கியது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் அரபு நாடுகளும் இணைந்து கொண்டன. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் இனியும் வளர்ந்தால் ஒட்டுமொத்த அரபுநாடுகளையும் ஆக்கிரமித்துவிடும் என்று அந்த நாடுகள் அஞ்சின.

இப்படி உலக நாடுகள் ஒன்றுதிரண்டு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை ஒடுக்கும் வகையில் தாக்குதல் நடத்துவதைத் தடுத்த மிக மோசமான ஈவிரக்கமற்ற செயலை அந்த பயங்கரவாதிகள் அரங்கேற்றத் தொடங்கினர்.. 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தங்களிடம் பிணைக் கைதிகளாக இருந்த அமெரிக்கர்களின் தலைகளை துண்டித்து அதை வீடியோவாக வெளியிட்டு உலகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கினர். அத்துடன் தங்களிடம் பிணைக் கைதிகளாக இருப்போரின் நாடுகளிடம் பெருந்தொகையான பணத்தைப் பேரமாகவும் பெற்றது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்.

மேலும் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் இருக்கும் பெண்களை விபசாரத்துக்காக பெருந்தொகைக்கு விற்பனை செய்தது; தமது ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருக்கும் எண்ணெய் வயல்களில் கச்சா எண்ணெய் எடுத்து கள்ளச் சந்தையில் விற்றது.. இத்தகைய செயல்களால் உலகில் மிகப் பெரிய பணக்கார பயங்கரவாத இயக்கமாக உருமாறியது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம். உலகை மிரட்டிய அல்கொய்தாவெல்லாம் சும்மா என்கிற வகையில் ஆட்டம் போட்டு வருகிறது ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்.

2014 ஆம் ஆண்டு அக்டோபரில் கோபெனி நகரையும் குர்து படையினரிடம் இருந்து இந்த தீவிரவாதிகள் கைப்பற்றினர். இன்னமும் தொடர்கிறது ஆக்கிரமிப்புகள்... தலை துண்டிப்புகள்.. அதுவும் கொத்து கொத்தாக நூற்றுக்கணக்கில்! இந்த இயக்கத்தின் தாக்குதல் இலக்கில் இல்லாத நாடுகளே இல்லை என்கிற வகையில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் அச்சுறுத்துகிற மிக மோசமான பயங்கரவாதம் இந்த உலகில் விஸ்வரூமபாக வெளிப்பட்ட ஆண்டுதான் 2014.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+