இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்து பிரிவதற்கான வாக்கெடுப்பு- கவுன்ட்டவுன் தொடக்கம்!!
லண்டன்: இங்கிலாந்து நாட்டுடன் 307 ஆண்டுகாலமாக இருந்து வரும் ஸ்காட்லாந்து தனிநாடாகப் பிரிவதற்கான வாக்கெடுப்புக்குரிய அதிகாரப்பூர்வ கவுன்ட்டவுன் இன்று தொடங்கியுள்ளது.
கி.பி. 1707-ம் ஆண்டு இங்கிலாந்துடன் அண்டை நாடான ஸ்காட்லாந்து இணைந்தது. பின்னர் வேல்ஸ் இணைந்ததை தொடர்ந்து அது கிரேட் பிரிட்டன் ஆக உருவானது.
வடக்கு அயர்லாந்தையும் உள்ளடக்கி தற்போது ஐக்கிய பேரரசு (யுனைடெட் கிங்டம்) ஆனது. கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமாக திகழும் ஸ்காட்லாந்தில் 50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு சல்மோன்ட் தலைமையிலான ஸ்காட்லாந்து தேசிய கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. அதில் இருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரிந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகிறது.
ஆனால் அதை இங்கிலாந்து விரும்பவில்லை. இருந்தாலும் இப்பிரச்சினை குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தனிநாடாவது தொடர்பாக 2014ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
செப்.18-ல் வாக்கெடுப்பு
இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 18ஆம் தேதியன்று ஸ்காட்லாந்து, இங்கிலாந்தின் ஒரு அங்கமாக இருப்பதா? அல்லது பிரிந்து தனிநாடாக செல்வதா? என்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த வாக்கெடுப்பில் சுமார் 40 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். இந்த வாக்கெடுப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ பிரசாரக் கூட்டங்கள் இன்று தொடங்கியுள்ளன. மொத்தம் 16 வாரங்கள் இந்த பிரசார கூட்டம் நடைபெற உள்ளது.
பிரசாரத்துக்காக அதிகபட்சமாக 25 லட்சம் டாலர்கள் செலவு செய்யலாம் என்றும் உச்சவரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்துடன் நீடிக்கலாம் என்ற தரப்பும் சுதந்திர நாடாக பிரியலாம் என்ற தரப்பும் தத்தமது வாதங்களை முன் வைத்து தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளன.
இந்த வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து பிரிய ஆதரவு கிடைத்தால் 307 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்காட்லாந்து சுதந்திர நாடாக மலரும் என்பது குறிப்பிடத்தக்கது.