இந்து கோயில் மீது தாக்குதல்... கடும் நடவடிக்கை எடுக்க பாக். பிரதமர் ஆணை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பெரும்பான்மையினராக முஸ்லீம்கள் உள்ளார்கள். அங்கு மொத்தம் உள்ள 22 கோடி மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள் ஆவார். அவர்களில் பெரும்பாலான மக்கள் சிந்து மாகாணத்தில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில், சிந்து மாகாணத்தின் கைர்பூர் மாவட்டத்தின் கும்ப் நகரில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்த அந்த கோயில் தாக்கப்பட்ட போது, யாரும் அதை தடுக்க முன்வரவில்லை.
இந்த விவகாரம் இந்து மக்களிடையே கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது, இதையடுத்து கோயிலை சேதப்படுத்திவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் பாகிஸ்தானில் போராட்டம் நடத்தினர்.
அப்போது இந்து கோயில்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து இந்து கோயில் தாக்குதல் விவகாரம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் கவனத்துக்கு சென்றது. கோயிலை தாக்கியவர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிந்து மாகாண போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குரான் நமக்கு போதித்த பண்புகளுக்கு எதிரானது என்றும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்து கோயில் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications