சிரியா முதல் பின்லாந்து வரை.. நடுக் கடலில் நடக்கும் ரசாயன ஆயுதங்கள் அழிப்பு பணி!!
டமாஸ்கஸ்: சிரியா ஒப்படைத்துள்ள ரசாயான ஆயுதங்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு கப்பலிலேயே அழிக்கப்பட்டு அதன் கழிவுகள் சிறிது சிறிதாக பின்லாந்து வரை கடற்பரப்பிலேயே கொட்டப்பட்டு வருகிறது.
சிரியாவில் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்நாட்டுப் போரில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ரசாயன ஆயுதங்களை சிரியா அதிபர் பஷார்- அல் அஸாத் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
பல்லாயிரக்கணக்கானோரை பலி வாங்கிய ரசாயன ஆயுதங்களை உடனே சிரியா ஒப்படைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியது. அமெரிக்காவோ சிரியா மீது வான் வழித் தாக்குதலை நடத்துவோம் என்ற மிரட்டியது.
ரசாயன ஆயுத ஒப்படைப்பு
இதனால் அதிர்ந்து போன சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸாத், தங்களிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை படிப்படையாக ஒப்படைத்துவிடுகிறோம் என்று இறங்கி வந்தார். இதைத் தொடர்ந்து சிரியாவின் ரசாயன ஆயுதங்களைப் பெற்று அதை முழுமையாக கடலிலேயே அழிக்கும் பணிகளை சர்வதேச கண்காணிப்புக் குழு மேற்கொண்டது.
கடைசி குவியல்..
கடந்த வாரம் சிரியா தமது வசம் இருந்த கடைசி ரசாயன ஆயுதங்களையும் ஒப்படைத்துவிட்டது. மொத்தமாக சுமார் ஆயிரம் டன் ரசாயன ஆயுதங்களை இதுவரை சிரியா ஒப்படைத்துள்ளது.
ரஷ்யா பாதுகாப்பு
இப்படி ஒப்படைக்கப்பட்ட ரசாயன ஆயுதங்கள் முதலில் முழுவதுமாக சேகரிக்கப்பட்டு நார்வே, டேனிஷ் கப்பல்களில் முதலில் ஏற்றப்படும். இதற்கு ரஷ்ய படைகள் பாதுகாப்பு வழங்கும்.
இத்தாலி
அதன் பின்னர் தென் இத்தாலியின் கலப்ரியாவில் உள்ள கியோ தரோவ் துறைமுகத்தில் சிறு பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன.
எம்.வி. கேப்ரே
அதன் பின்னர் எம்.வி. கேப் ரே என்ற கப்பலில் இவை அனைத்தும் ஏற்றப்படும். இந்த கப்பலிலேயே ரசாயன ஆயுத அழிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. நடுக்கடற்பரப்பில் வைத்து ரசாயன ஆயுதங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடுகின்றன.
கடற்பரப்பில் கழிவுகள்
அதன் பின்னர் இங்கிலாந்து, ஜெர்மனி, பின்லாந்து கடற்பரப்புகளில் சிறிய சிறிய அளவில் ரசாயன ஆயுத கழிவுகள் கொட்டப்பட்டுவிடுகின்றன. இதன் மூலம் சிரியா மக்கள் ரசாயன ஆயுத தாக்குதல் அச்சத்திலிருந்து முழுமையான விடுபடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
குளோரின் வாயு குண்டுகள்
சிரியா பயன்படுத்தியதில் பெரும்பகுதியானவை மிகவும் ஆபத்தான குளோரின் வாயு குண்டுகள்தான். இவை முதலாவது உலகப் போரில் பயன்படுத்தப்பட்டவையாகும். இதைத்தான் சிரியா அரசாங்கமும் கிளர்ச்சியாளர்கள் மீது வீசியிருக்கிறது என்கின்றனர் சர்வதேச ரசாயன ஆயுத கண்காணிப்புக் குழுவினர்.