தோஹாவில் இந்தியா- கத்தார் அதிகாரிகள் தொழிலாளர் மேம்பாடு குறித்து ஆலோசனை
தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய - கத்தார் அதிகாரிகள் தொழிலாளர் மேம்பாடு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் இந்திய இமிக்ரேசன் அதிகாரியும், வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் இணைச் செயலாளருமான மோகனிஷ் வர்மா தலைமையில் 4 உறுப்பினர் கொண்ட குழுவினர் கத்தார் நாட்டின் தொழிலாளர் நலத்துறையின் இயக்குநர் சாலே அல் சாவியை சந்தித்து பேசினர்.
முன்னதாக இந்திய தூதர் சஞ்சிவ் அரோரா தலைமையிலான குழுவினர் கத்தார் நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் அப்துல்லா எஸ் அல் குலைபியை சந்தித்தனர். அவர்களை டாக்டர் அப்துல்லா வரவேற்றார். அப்போது அவர் கத்தார் நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வரும் இந்திய சமூகத்தினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
அதற்கு நன்றி தெரிவித்த சஞ்சிவ் அரோரா இந்திய மக்களுக்கு எல்லா விதமான வாய்ப்புகளையும் வழங்கி வருவதற்கு நன்றி கூறினார். மேலும் தொழிலாளர் முகாமை சீரமைக்கும் கத்தார் அரசின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கத்தார் சென்றுள்ள இந்திய குழுவினர் மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளர்களுக்கு உதவி வருவதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த குழுவினர் தோஹாவின் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழிலாளர் நகரையும் பார்த்தனர்.