ஃப்ளோரிடாவை புரட்டிப் போட்ட இர்மா புயல்... அடைக்கலம் கொடுத்த அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை இர்மா புயல் புரட்டிப் போட்டுள்ளது, இதனையடுத்து மழையால் தவிக்கும் மக்களுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
வாஷிங்டன் : ப்ளோரிடாவை அச்சுறுத்தி வந்த இர்மா புயல் கரையைக் கடந்துள்ள நிலையில், மழையால் வீடுகளை இழந்தோருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
அட்லாண்டிக் பெருங்கடலில் மிகவும் சக்திவாய்ந்த புயலாகக் கடந்த சில நாள்களுக்கு முன் உருவானது இர்மா. சுமார் 220 கி.மீ வேகத்தில் சூறாவளியாக சுழன்றடித்துள்ள இந்தப் புயலால், ஃப்ளோரிடா மாகாணமே உருக்குலைந்துள்ளது.
புயல் காரணமாக, 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகளுக்கு ராணுவம் தயார் நிலையில் உள்ளது. ஆனால், புயல் தொடர்ந்து வலுவாக இருப்பதால், மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை.
3 பேர் உயிரிழப்பு
இர்மா புயலால் ஜார்ஜியா, தெற்கு கரோலினா உள்ளிட்ட மாகாணங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இர்மா புயல் நேற்று மாலை 200 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்துள்ளது. இந்தப் புயலில் சிக்கி இது வரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது.
|
உதவிக் கரம் நீட்டிய இந்தியர்கள்
இந்நிலையில் மழை, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்லாண்டாவில் வாழும் அமெரிக்க இந்தியர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். இந்தோ அமெரிக்க அமைப்புகளில் ஒன்றான சேவா சர்வதேச அமைப்பு 300 குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியுள்ளது.
|
அட்லாண்டா இந்தியர்கள் உதவி
இதே போன்று இதர சங்கங்கள் மற்றும் மத அமைப்புகளும் ஏறத்தாழ 2 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவியுள்ளன. அட்லாண்டாவில் உள்ள நான்கு ஆலயங்கள் ஃபளோரிடா மக்கள் தங்குவதற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
|
இலவச உணவு வழங்கும் அம்மா கிச்சன்
அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகம் பல்வேறு அமைப்புகள் மற்றும அட்லாண்டாவில் வாழும் அமெரிக்க இந்தியர்களை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை செய்யும் பணியில் இணைத்துக் கொண்டுள்ளது. ஃப்ளோரிடாவில் பிரபலமான அம்மா கிச்சன் ப்ளாரிடாவில் இருந்து வரும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று கூறி உதவி செய்து வருகிறது.