லண்டன் பள்ளியில் குழந்தை பெற்ற இந்திய ஆசிரியை: வகுப்பறைக்கு குழந்தை பெயர்
லண்டன்: லண்டனில் இந்திய ஆசிரியை ஒருவருக்கு வகுப்பறையிலேயே குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு பெற்றோர் ஜோனா எனப் பெயர் சூட்டியதால், பிரசவம் நடந்த அறைக்கு ஜோனா வகுப்பறை எனப் பெயரிட்டது பள்ளி நிர்வாகம்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார் இந்தியாவை சேர்ந்த டயானா கிரிஷ் என்ற 30 வயதுப் பெண். இவரது கணவர் பெயர் விஜய் வீரமணி. இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் நோவா என்ற ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்தார் டயானா. நிறைமாத கர்ப்பிணியான டயானா, கடந்த வெள்ளிக்கிழமை முதல் பிரசவ விடுப்பு எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்கு முதல் நாள் பள்ளிக்குச் சென்ற டயானாவுக்கு, பள்ளியிலேயே வைத்து பிரசவ வலி ஏற்பட்டது.
சக ஆசிரியைகளிடம் விவரம் தெரிவித்த டயானா உடனடியாக தன்னை வந்து அழைத்துச் செல்லும் படி கணவருக்கும் போன் செய்துள்ளார். ஆனால், அதற்குள் வலி அதிகரிக்கவே பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே வகுப்பறையிலேயே டயானாவுக்கு குழந்தை பிறந்து விட்டது. அழகிய அந்தக் குழந்தைக்கு ஜோனா எனப் பெயரிட்டனர் பெற்றோர். அதனைத் தொடர்ந்து ஜோனா பிறந்த வகுப்பறைக்கு ‘ஜோனா வகுப்பறை' எனப் பெயர் சூட்டியது பள்ளி நிர்வாகம்.