இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு
ஒட்டாவா: கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சம் அடைந்த காரணத்தால் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் கனடா வர தடை விதிக்கப்பட்டிருந்தது அந்தத் தடையை செப்டம்பர் 27ம் தேதி (இன்று) நீக்கி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சம் பெற்றது. இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் பயணிகள் விமான சேவையை கனடா அரசு தடை செய்தது. இந்தத் தடையை பலமுறை கனடா அரசு நீட்டித்து. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா சூழல் தற்போது முற்றிலும் மாறி உள்ளது. தினசரி பாதிப்பு குறைந்து உயிரிழப்பு குறைந்த காரணத்தால், கனடா அரசு இந்திய பயணிகள் விமானம் கனடா வர விதிக்கப்பட்ட தடையை இன்று முதல் விலக்கி உள்ளது.
அனைத்து விதமான வர்த்தக பயணிகள் விமானங்களுக்கும், தனியார் பயணிகள் விமானங்களுக்கும் 26 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் விலக்கப்படுவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
இன்று முதல் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானங்கள் தடையின்றி இயக்கப்படும், இந்தியாவிலிருந்து பயணிகள் வருவதற்கும் கட்டுப்பாடுகள் இல்லை. அதேசமயம் கரோனா தடுப்பூசி, கரோனா தடுப்பு வழிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம், பயணிகள் 27ம் தேதி முதல் கனடாவுக்கு வரலாம். பயணிகள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், பயணத்துக்கு 18 மணிநேரத்துக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் மையத்தில் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விலக்கப்பட்டுள்ளதை இந்தியா வரவேற்றுள்ளது. ஏர் இந்தியா சார்பில் வரும் 30-ம் தேதி முதல் கனடாவுக்கு விமான சேவை தொடங்குகிறது.