இந்தோனேஷியாவை ஆட்டிப்படைக்கும் நிலநடுக்கங்கள்.. பறிபோகும் உயிர்கள்.. பீதியில் உறையும் மக்கள்!
இந்தோனேஷியாவை ஆட்டிப்டைக்கும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
லாம்போர்க்: இந்தோனேஷியாவை ஆட்டிப்டைக்கும் நிலநடுக்கங்களால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அடிக்கடி நிலநடுக்கங்களின் அச்சுறுத்தலுகுக்கு ஆளாகும் இந்தோனேஷியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்தோனேஷியாவில் சுமார் 17500க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. ஆனால் இவற்றில் ஆறாயிரம் தீவுகள் மட்டுமே மக்கள் வாழ தகுதியுடையவை ஆகும். இந்தோனேசியா எரிமலை வளையத்தைச் சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன
நிலநடுக்கம் உயிரிழப்பு
இந்நிலையில் இந்தோனேஷிய தீவுகளில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கங்களால் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
உலக நாடுகள் பீதி
கடந்த 2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக நாடுகள் அனைத்தையும் பேரிழப்புக்குள்ளாக்கியது. பலத்த உயிர் சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது.
சுனாமி தாக்கியது
அதுவரை சுனாமி என்ற வார்த்தையை கேட்டீராத மக்கள் அப்போதுதான் முதல்முறையாக சுனாமி என்ற வார்த்தையை கேட்டனர். 2004ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் உருவாகி இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2005 - நிலநடுக்கம்
கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் சுமத்ரா தீவுக்கு அருகே கடல் பகுதியில் பயங்கர பூகம்பம்ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் இது 8.7 ஆக பதிவானது. டிசம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 9.0 ஆகும். இந்த நிலநடுக்கத்தால் 500க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
பீதியில் உறைந்த நாடுகள்
மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் ஆகிய இடங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மீண்டும் பீதியில் உறைந்தன உலக நாடுகள்.
2006 - நிலநடுக்கம்
கடந்த 2006ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் ஜாவா தீவுக்கு தெற்கே கடலுக்கடியில் 7. 2 என்றஅளவுக்கு நிலநடுக்கம் பதிவானது. இதில் குறைந்தபட்சம் 10 பேர் பலியானதாக கூறப்பட்டது.
சிறிய சுனாமி அலை
இந்தோனேஷியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் சிங்கப்பூர், மலேசியாவிலும் உணரப்பட்டது. இதையடுத்து இந்தியா மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், 1 அடி உயரமுள்ள சிறிய சுனாமி அலையே உருவானதால் இந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுவிட்டது.
22 பேர் பலி
கடந்த 2013 ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
100க்கும் மேற்பட்டோர் பலி
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியத் தீவுகளை வலிமை வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
உயிரிழப்பு பொருட்சேதம்
இவை தவிர ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட நில நடுக்கங்களையும் நில அதிர்வுகளையும் இந்தோனேஷிய தீவுகள் சந்தித்து வருகின்றன. அவற்றால் அவ்வப்போது குறைந்தளவு உயிரிழப்புகளும் அதிக அளவு பொருட்சேதமும் ஏற்படுகிறது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்நிலையில் இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது. 45 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இது மையம் கொண்டிருந்தது. இதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட சிறு சிறு நில அதிர்வுகளும் ஏற்பட்டன.
82 பேர் உயிரிழப்பு
இந்த நிலநடுக்கத்திற்கு 82 பேர் பலியாகி உள்ளனர். இது இரண்டாவது முறையாக லாம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். அந்நாட்டு அதிகாரிகள் நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. ஆனால் கடலை ஒட்டி அருகில் இருந்த கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது.