லண்டனில் பொங்கல் கொண்டாட்டம்... ஔவையார்,திருவள்ளுவர், கண்ணகி வேடமிட்டு சிறுவர்கள் அசத்தல்!!
லண்டனில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமானோர் உற்சாகமுடன் கலந்துகொண்டனர்.
நியூபெரி: லண்டனின் நியூபெரி நகரில் உள்ள தமிழர்கள் சார்பில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் ஔவையார், புலித்தேவன், திருவள்ளுவர், கண்ணகி, வ உ சி, அப்துல்கலாம் உள்ளிட்டோர் வேடமிட்டு சிறுவர்கள் அசத்தியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழகர்களின் திருநாளாம் பொங்கல் திருநாளை அவரவர் வசிக்கும் இடத்தில் ஒருங்கிணைந்து கொண்டாடிகின்றனர். லண்டன் நியூபெரி நகரில் வசிக்கும் தமிழர்களும் மண் மணம் மாறாமல் பொங்கல் திருநாளை வெகு உற்சாகமாக கொண்டாடினர்.
லண்டன் அருகில் உள்ள நியூபெரியில் நியூபெரி தமிழ் நண்பர்கள் சார்பில் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக பாரம்பரிய கலாச்சாரத்துடன் கொண்டாடப்பட்டது. பெரியவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் பொங்கல் விழா
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கும்மிப்பாட்டு, கோலப்போட்டி உள்ளிட்டவை இடம்பெற்றன. பொங்கல் விழா பண்டிகையின் சிறப்பு மற்றும் ஜல்லிக்கட்டு பற்றி குழந்தைகள் மற்றும் அனைவருக்கும் காணொளி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் எடுத்துரைத்தனர்.
பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள்
விழாவில் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம் மற்றும் மயிலாட்டம் இடம்பெற்றது. குழந்தைகளுக்கான பாட்டு நிகழ்ச்சி, அதனை தொடர்ந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பானை உடைத்தல் போட்டிகள் நடைபெற்றன.
லண்டனில் அணிவகுத்த தமிழ்த் தலைவர்கள்
மாறுவேட போட்டியில் சிறுவர் சிறுமியர்கள் ஔவையார், புலித்தேவன், திருவள்ளுவர், கண்ணகி, வ உ சி,அப்துல்கலாம், ராஜராஜ சோழன், மருது சகோதரர்கள், கொடி காத்த குமரன் வேலுநாச்சியார் மற்றும் ராணி மங்கம்மாள் போன்று வேடமிட்டு அணிவகுத்தனர். இதனை அங்கு கூடியிருந்த தமிழர்கள் வெகுவாக ரசித்தனர்.
தலை வாழை இலையில் விருந்து
சிறுவர்களுக்கன படம் வரைதல் போட்டியில் அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். விழாவின் சிறப்பாக அனைவருக்கும் நமது கலாச்சாரமான தலை வாழை இலையில் தமிழ் நாட்டு விருந்து பரிமாறப்பட்டது.
ஜல்லிக்கட்டு நமது உரிமை
விழா முடிவில் ஜல்லிக்கட்டு நமது உரிமை,பாரம்பரியம் என்று ஒருமித்த குரலை தங்களது உணர்ச்சியுடன் அனைவரும் பதிவிட்டனர். கடல் பல கடந்தாலும், காலங்கள் மாறினாலும் நமது கலாச்சாரம் மாறவில்லை என்று அனைவரும் உணர்ந்த திருநாளாக இந்த நாள் அமைந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.