அமெரிக்க கப்பலில் பரவிய மர்ம நோய்: 22 சிப்பந்திகள் உட்பட 303 பேருக்கு வாந்தி-பேதி!
நியூயார்க்: சுமார் நாலாயிரத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்த அமெரிக்க சொகுசுக் கப்பலில் பரவிய மர்ம நோய்த் தாக்குதலால், அதில் பயணம் செய்த 303 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த 21ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சியில் இருந்து ராயல் கரீபியன் என்ற சொகுசு கப்பல் புறப்பட்டது. இதில் 1,165 சிப்பந்திகள் உட்பட 3,050 பயணிகள் பயணம் செய்தனர்.
இந்நிலையில் கப்பலில் இருந்த 22 சிப்பந்திகள்கள் உட்பட 303 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் எதிர்பாராத வகையில் நோய் தாக்குதலில் சிக்கி இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும், இந்த நோய்க்கிருமி சம்பந்தப்பட்ட ஒரு நபரிடமிருந்தோ அல்லது நீர் மற்றும் அசுத்தமான நீர் மூலமாகவோ பரவி இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலை அமெரிக்க நோய் தடுப்பு மையமும் உறுதி படுத்தியுள்ளது. ஆகவே, நோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள் பயணம் செய்த கப்பல், தனது 10 நாள் பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு வெர்ஜின் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.