செவ்வாய்க்கு மனிதன் போகும் நாள் ரொம்ப தொலைவில் இல்லை.. 2039ல் சாத்தியமாகப் போகிறதாம்!
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்திற்கு மனிதன் போக முடியுமா, போனால் உயிர் வாழ முடியும், போய் விட்டுத் திரும்ப முடியுமா, அங்கு தண்ணீர் இருக்கிறதா என்றெல்லாம் ஆய்வுகள் தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கின்றன ஒரு பக்கம். இந்த நிலையில் ஒரு ஆறுதல் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது 2039ம் ஆண்டு வாக்கில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் அளவுக்கு நாசா மேம்பட்டு விடும் என்பதுதான் அது.
2033ம் ஆண்டு வாக்கி்ல் செவ்வாயின் நிலவான போபோஸுக்கு விண்கலத்தை தரையிறக்கி அங்கிருந்தபடி செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்குவதற்கான அடிப்படை வேலைகளை, முகாம்களை நாசா செய்ய முடியுமாம்.
அதன் பின்னர் 2039ம் ஆண்டு மனிதர்களை நேரடியாக செவ்வாய் கிரகத்திலேயே இறக்க முடியுமாம். ஆனால் ஒரு மாத காலத்திற்கு மட்டுமே அந்த சமயத்தில் மனிதர்களால் அங்கு தங்க முடியுமாம்.
2043ம் ஆண்டு மனிதர்களை அனுப்பும்போது ஒரு வருட காலம் வரை தங்க முடியுமாம்.
கூடுதல் செலவில்லை...
இந்தபு் புதிய திட்டத்தை நாசாவின் ஜெட் புரபல்ஷன் ஆய்வகம் தயாரித்துள்ளது. இந்த திட்டத்தால் பெரிய அளவில் கூடுதல் செலவு ஏற்படாது என்றும் அது கூறியுள்ளது. ஓரளவு கூடுதலான பட்ஜெட்டில் இன்னும் 24 ஆண்டுகளில் இதை சாதிக்க முடியும் என்று ஜெட் ஆய்வகம் தெரிவித்தஉள்ளது.
நாசாவின் திட்டம்...
நேரடியாக முதலில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவதை விட அதன் நிலவில் தரையிறங்குவது சற்று புத்திசாலித்தனமானது என்பது நாசாவின் திட்டமாகும். 2043ம் ஆண்டு நான்கு விண்வெளி வீரர்களை நாசா செவ்வாய்க்கு அனுப்பி வைக்கவுள்ளது. அவர்கள் அங்கு ஒரு ஆண்டு வரை தங்கியிருப்பார்களாம்.
அடுத்தடுத்து...
தற்போது இந்த புதிய திட்டத்தை இப்படி செயல்படுத்தவுள்ளது நாசா. முதலில் செவ்வாய் கிரக சுற்றுப் பாதை வரைக்கும் மனிதனை அனுப்புவது. அடுத்து அதன் நிலவான போபோஸில் போய் இறங்குவது. அடுத்து செவ்வாய் கிரகத்தில் இறங்குவது என்பதே அந்தத் திட்டமாகும்.
3 வருடமாகும்...
செவ்வாய்க்கு செல்வது என்பது சாமானியமானதல்ல. மொத்தம் 9 மாதங்கள் அதற்கு பயணப்பட வேண்டி வரும். மேலும் இது ஒரு வழிப் பயணம் ஆகும். அதேசமயம், மனிதனை அனுப்புவதாக இருந்தால் அதற்கு 3 வருட காலம் பிடிக்கும் என்று தெரிகிறது, அதாவது பயண காலம்.
குறுக்கு வழி...
இது மிகக் கடினமானது என்பதால் சுருக்கமாக செவ்வாயை அடைய வேறு வழி இருக்கிறதா என்ற கோணத்திலும் ஒரு ஆய்வு முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடினம் தான்...
இதற்கிடையே அடுத்த 50 வருடங்களுக்கு செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவது என்பது மிகக் கடிமானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பரவாயில்லை, லேட்டானாலும் ஜம்மென்று போய் இறங்கும் வாய்ப்பை தேடிக் கண்டுபிடிங்க பாஸ்.. நாம போகாட்டியும், நமது பேரப் பிள்ளைகள் போய் விட்டு வருவார்கள் இல்லையா.