மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு... அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை முறித்துக் கொண்ட நியூசிலாந்து
வெலிங்டன்: மியான்மர் நாட்டில் ராணுவத்தின் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றுள்ள நிலையில் அந்நாட்டுடனான அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை நிறுத்திக்கொள்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.
மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ புரட்சி நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அந்நாட்டில் தற்போது இணையச் சேவை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதே வெளியுலகிற்குத் தெரியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களைச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அந்நிறுவனங்கள் மியான்மர் ராணுவத்திடம் வலியுறுத்தியுள்ளன.
உறவுகளை நிறுத்திக்கொண்ட நியூசிலாந்து
மியான்மர் நாட்டில் நடைபெற்றுள்ள இந்த ஆட்சி கவிழ்ப்பிற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மியான்மர் நாட்டுடனான அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை நிறுத்திக்கொள்வதாகவும் மியான்மர் ராணுவத்தின் இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறியுள்ளார்.
வேதனை தருகிறது
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "மியான்மரில் ஒரு ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பப் பல ஆண்டுகளாகக் கடுமையாக உழைத்த பின், சமீப நாட்களாக அங்கு ராணுவத்தால் நடத்தப்படும் செயல்களைப் பார்க்கும்போது வேதனையாக உள்ளது" என்றார். நியூசிலாந்து ராணுவத்தின் முக்கிய வீரர்களும் மியான்மர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், மியான்மர் நாட்டை தனிமைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள முதல் நடவடிக்கை இதுவாகும்.
ஐநா விசாரணை தேவை
மேலும், மியான்மரில் நடைபெற்ற சம்பவம் குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். மியான்மர் நாட்டில் நியூசிலாந்து சார்பில் சுமார் 30.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை அந்நாட்டு ராணுவத்திற்குச் செல்வதில்லை என்பதை உறுதி செய்யப்பட்டவுடன் இத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் முறைகேடு
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் மிகப் பெரியளவில் முறைகேடு நடைபெற்றதாகவும் இதன் காரணமாகவே ஆட்சி கவிழ்க்கப்பட்டதாகவும் மியான்மர் ராணுவம் தெரிவித்துள்ளது. நியமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டவுடன் ஆட்சி திருப்பி அளிக்கப்படும் என்றும் ராணுவம் தெரிவித்திருந்தது. ஆனால், மியான்மர் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று நியூசிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.