வெளிநாட்டினர் வேலை செய்யும் இடங்களில் ரெய்ட்.. அமெரிக்காவை விட்டு துரத்த துடிக்கும் அதிபர் டிரம்ப்!
அமெரிக்காவில் வெளிநாட்டினர் வேலை பார்க்கும் நிறுவனங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நியுயார்க்: இரண்டு நாட்களுக்கு முன்புதான் எச்-1பி விசா முறையில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அமெரிக்க அரசு தெரிவித்து இருந்தது. இது அமெரிக்காவில் இருக்கும் பல இந்தியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
தற்போது மீண்டும் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி அமெரிக்காவில் முறைகேடாக கூறியிருக்கும் நபர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த வெளியேற்றும் நடவடிக்கை இப்போதே தொடங்கிவிட்டது. வெளிநாட்டு பணியாளர்களை கண்டுபிடிக்க வித்தியாசமான முறையை தற்போது அமெரிக்க அரசு பின்பற்றி இருக்கிறது.
7-லெவன் ரெய்ட்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது 7-லெவன் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக நிறைய கடைகளும், அலுவலகங்களும் இருக்கிறது. அமெரிக்காவிற்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் செல்லும் நபர்கள் இங்கு அதிகம் வேலை பார்க்க்கிறார்கள். நேற்று இங்கு ரெய்ட் செய்யப்பட்டது.
காரணம் என்ன
அமெரிக்க வெளியுறவுத்துறையும் சுங்கத்துறையும் இந்த சோதனையை நடத்தியது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவர் குறித்தும் விசாரித்தது. இதில் முறைகேடாக தங்கி இருப்பவர்கள் எளிதாக கண்டுபிடிக்கப்படுவார்கள். அவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள்.
என்ன நடவடிக்கை
இவர்கள் கைது செய்யப்பட்டது மட்டும் இல்லாமல் உடனடியாக நாட்டை விட்டும் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோல முறைகேடாக வருபவர்களுக்கு இடம் கொடுக்கும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே
தற்போது 7-லெவன் நிறுவனத்தில் ரெய்ட் மட்டுமே நடந்து இருக்கிறது. ஆனால் நேற்று பல்ஜிந்தர் சிங் என்ற 43 வயது இந்தியரின் அமெரிக்க குடியுரிமை பறிக்கப்பட்டு உள்ளது. 1991ல் அமெரிக்கவிற்கு சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர் வாங்கிய அமெரிக்க குடியுரிமை செல்லாது என்று அரசு அறிவித்து இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இவர் இந்தியா திரும்ப வாய்ப்பு உள்ளது.