அஜ்மானில் கவிஞர் மஸ்கட் பஷீர் எழுதிய "பாலைப் பூக்கள்" புத்தக மதிப்பீட்டு விழா
அஜ்மான்: மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கவிஞர் பஷீர் தமது அமீரக விஜயத்தில் மற்றுமொரு இலக்கிய நிகழ்வாக அவர் எழுதிய "பாலைப் பூக்கள்" கவிதை நூல் மதிப்பீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். விழாவில் ஈ.டி.ஏ மெல்கோவின் முன்னாள் பொது மேலாளர் திரு. ஹசன் அஹமது தலைமை தாங்கினார்.
இவ்விழா வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் நண்பர்கள் குடும்ப சந்திப்பாக ஏற்பாடு செய்திருக்க 31.07.2014 அன்று இரவு 9.00 மணி அளவில் அஜ்மான் சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தினை செல்வி ஆனிஷா பாடினார். கவிஞர் ஜியாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவைத் தொகுத்து வழங்கினார் கவிஞர் காவிரிமைந்தன்.
சிறப்பு விருந்தினர் மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் கவிஞர் பஷீர் அவர்களுக்கு தமிழ்தேர் சார்பில் கவிஞர் காவிரிமைந்தன் பொன்னாடை அணிவித்தார். திருமதி பஷீர் அவர்களுக்கு நினைவுப் பரிசினை திருமதி பரக்கத் ஹசன் வழங்கினார். தலைமையேற்ற திரு. ஹசன் அஹமது அவர்களுக்கு ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லா பொன்னாடை அணிவித்தார். நினைவுப் பரிசை தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் கவிஞர் ஜியாவுதீன் வழங்கினார்.
"பாலைப் பூக்கள்" கவிதை நூல் பற்றி தங்களது எண்ணங்களை எடுத்துரைக்க திருமதி நர்கீஸ் பானு, திண்டுக்கல் ஜமால் மற்றும் கவிஞர் காவிரிமைந்தன் - கவிஞர் பஷீர் அவர்களின் மொழி ஆளுமையையும் .. கவித்துவத் திறன் பற்றியும் உதாரணங்களோடு எடுத்துரைத்தனர். நகைச்சுவையும்.. கருத்துக்களும் பொதிந்திருந்த பின்னூட்டங்கள் கூடியிருந்தோர் கைதட்டல்களோடு பாராட்டைப் பெற்றன.
தலைமை விருந்தினர் திரு. ஹசன் அஹமது அவர்கள் 1985க்குப் பிறகு தான் பங்கேற்கும் முதல் இலக்கியக் கூட்டமிது என்று முன்னுரை தந்து.. நெஞ்சை அள்ளும் தமிழால் தன் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
அமைப்பின் ஆலோசகர் கவிஞர் காவிரிமைந்தன், தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் கவிஞர் ஜியாவுதீன், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லா, திண்டுக்கல் ஜமால், கவிதாயினி நர்கீஸ் பானு செல்வி ஆனிஷா ஆகியோருடன் முக்கிய விருந்தினராக ஈ.டி.ஏ மெல்கோவின் முன்னாள் பொது மேலாளர் திரு. ஹசன் அஹமது குடும்பத்தினருடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
"பாலைப் பூக்கள்" நூலாசிரியர் கவிஞர் பஷீர் தனது ஏற்புரையில் நெஞ்சம் நெகிழ்ந்து.. கவிதை ஆக்கம் தன்னுள் இருக்கும் இன்னொரு சக்தியை வெளிக்கொணருகிறது என்றும் அதற்கு தமிழ்த் தேர் மாத இதழ் துணை புரிகிறது என்றும் புகழாரம் சூட்டினார். தனது உரையின் முதற்கட்டமாக தமிழ்த்தேர் தலைவர் திரு கோவிந்தராஜ் அவர்களின் தமிழ்த் தொண்டினை தான் மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று தொடங்கினார். தனது நூலைப் பற்றிய .. கவிதைகள் பற்றிய பகிர்வுகளை மேற்கொண்ட கவிஞர் பெருமக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். தனது அடுத்த ஒரு நூலும் உருவாகி வருவதாக குறிப்பிட்டார். தனது ஈத் பெருநாள் விடுமுறை விஜயத்தை இலக்கியமும் கலந்து அமைத்துத் தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
விழா ஏற்பாடுகளை தமிழ்த்தேர் தலைவர் கோவிந்தராஜ்.. கவிஞர் காவிரிமைந்தன் மற்றும் கவிஞர் ஜியாவுதீன் சிறப்பாக செய்திருந்தனர். விழாவில் கன்னி முயற்சியாக செல்வன் பாஸிம் பஷீர் நன்றியுரையாற்றினார்.