அரசியலமைப்பை மீறியதாக முஷாரப் மீது வழக்கு: நிரூபணமானால் தூக்கு (அ) ஆயுள்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி 2 முறை அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக முஷரப் மீது இன்று புதிய வழக்கு தொடர இருப்பதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியாளராக இருந்த முஷரப், பெனாசிர் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க வெளிநாடுகளில் வசித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் திரும்பிய அவர் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் மீண்டும் தொடங்கியது. சமீபத்தில் நான்கு முக்கிய வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்ற அவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து வீட்டுக்காவலில் இருந்து மட்டும் விடுதலை அளித்தது நீதிமன்றம். அதனைத் தொடர்ந்து துபாயில் இருக்கும் தனது 95 வயது தாயாரின் உடல்நிலைக் குறித்து நேரில் சென்று பார்த்து வர வேண்டும் என முஷரப் சார்பில் அவரது வழக்கறிஞர் ஏ.கியூ. ஹேல்பொடோ, சிந்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது தொடர்பாக 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு துணை தலைமை வழக்கறிஞர், சிந்து மாகாண தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்த மேல்முறையீட்டில் முஷரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பானால், அவர் மீண்டும் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புகள் உண்டாகும் என்ற நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார், முஷரப் மீது புதிய வழக்கு ஒன்றை தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, பாகிஸ்தானில் அரசியலமைப்பு சட்டத்தை மீறிய வகையில் 2 முறை அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக முஷரப் மீது குற்றம் சாட்டி அவர் இன்று புதிய வழக்கு தொடர இருப்பதாக அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், முஷரப்பிற்கு குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையோ, அதிகபட்சமாக மரண தண்டனையோ விதிக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.