சிறந்த குடிமகனுக்கான மலேசிய அரசின் ‘டத்தோ’ பட்டம்... ராமநாதபுரம் இளைஞர் தேர்வு
கோலாலம்பூர்: மலேசிய அரசின் உயரிய விருதான டத்தோ பட்டத்தை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பெற்றுள்ளார்.
‘டத்தோ' என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கியமான விருதுகளில் ஒன்றாகும். மலேசியப் பேரரசர், மலேசிய மாநிலங்களின் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களும் டத்தோ விருதை வழங்குகின்றனர்.
இந்த விருதானது கடந்த 1965-ம் ஆண்டில் இருந்து அந்நாட்டு பொதுமக்களின் சேவைகளைப் பாராட்டும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. மலேசியர்களுக்கு மட்டுமே அளிக்கக்கூடிய இந்த விருதை, வெளிநாட்டவர்களும் தங்களின் அரிய சேவைகளுக்காக பெற்றுள்ளனர்.
அந்த வகையில் கடந்தாண்டிற்கான டத்தோ விருதுகள் பெறும் 12 பேரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம் பெற்றுள்ளார். இவரது பெயர் முகம்மது யூசுப் (35). ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட கமால் பாட்சாவின் மகன் இவர்.
சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் டத்தோ விருதுக்காக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.